சென்னை புத்தகக் காட்சி 2023/இரா.முருகன்

நடந்தேறிய சென்னை புத்தகக் கண்காட்சி 2023-ல் கிடைத்த அனுபவப் பாடங்கள் –

1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.

2) 400 பக்கத்துக்கு மேல் புத்தகம் இருந்தால், பாகம் ஒன்று, இரண்டு எனப் பிரித்து வெளியிடுவது நன்று.
நேற்று என் நண்பர் ஆங்கில எழுத்தாளினி சொன்னது – ‘மிளகு நாவலைப் படுத்துக்கொண்டு படிக்க முடியவில்லை. தப்பித் தவறி கைநழுவி விழுந்தா, காலில் அடி பட்டு வலிக்குது’

3) அமெரிக்கா முதல் உலகெங்கணும் வாழும் Diaspora தமிழர்கள் அச்சுப் புத்தகம் படிப்பதை அறவே மறந்து விட்டார்கள்.
‘மிளகு நாவலுக்கு மின்பதிப்பு இல்லாமல் படிக்க முடியலே. சீக்கிரம் கிண்டில் ஈபுக் போடச்சொல்லுங்க”

4) 30 வினாடி நிகழ்வோ, பத்துக்கு மேற்பட்ட நூல்களுக்கானதோ, ஒருவர் கொடுக்க அடுத்தவர் பெற்றுக்கொள்ள மொபைலில் படம் பிடிக்க, புத்தக வெளியீட்டு விழா அவசியம்

5) போன வருடம் புத்தகக் காட்சியில் வாங்கி இன்னும் வாசிக்காது இருக்கும் புத்தகங்கள் பற்றிக் குற்ற போதம் கலந்த பெருமை எல்லோருக்கும் இருக்கிறது.