பார்த்தாள்/ஹரணி

00

பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

முன்பு கொரோனாவில்
கணவன் இறந்துபோனான்.

பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இப்போது இருந்த ஒரு மகனும் இறந்து போனான் விபத்தில்.

பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

உறவுகள் எதுவும் ஏற்கவில்லை.

வெண் குட்டம் உடம்பில் வேடிக்கைக் காட்டுகிறது.

பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

உழைத்துப் பிழைக்கப் போனால் உடம்பு தா என்கிறார்கள்.

  காமத்திற்குப் பேதமில்லை வெண் குட்டம் என்கிறார்கள். 

 பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள். 

  இதற்குப் பின்னரும் வாழ்வதா இவ்வுலகில் என யோசித்தாள். 

ஆழமாக யோசித்தாள்.

தற்கொலை செய்து உயிர் மாய்க்கலாமா என்று.

   முடிவுக்கு வந்தாள். 

   சாவதற்கு எனில் ஏன் இருக்கிறோம். 

   முடிவெடுத்தாள்.

  இல்லை என்வாழ்வை 

நான் வாழவேண்டும்.

  பின் யார் வாழ்வது என் வாழ்வை?