பொக்கை (கள்)/சாந்தி சரவணன்


அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
நொடிகள்!

எப்படிக் கழிப்பது இந்த
பகற்பொழுதை
என்பதே அவர்களின்
அச்சம்!

இரவுப் பொழுதில்
வராத தூக்கத்தை
ஏமாற்றி
போர்வைக்குள்
கண் முடி ஒளிந்து கொள்கிறார்கள்!

ஆனால்
பகலில்
பேச்சுத் துணையின்றி
பெற்ற மனம் பரிதவிக்கிறது!

கொஞ்சி யானை விளையாட்டு விளையாட
பேரன் பேத்தி அருகில் இல்லை!

சாப்பிடிங்களா என கேட்க
மகனும் மகளும் பக்கத்தில் இல்லை!

உறவுகளின் விழாவில்
கலந்துக்கொண்டு
உறவாட வழியில்லை!

பொக்கைகள் இரண்டும்
அண்ணாந்து விட்டத்தை பார்த்தபடி
பல மணி நேரம்
ஊடகங்கள்
பார்த்தபடி
சில நேரம்
நினைவலைகளில்
வாழந்தபடி
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலர்
முதியோர் இல்லங்களிலும்
சிலர்
தனித்துவிடப்பட்டத் தாழ்வாரங்களிலும்!