சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – பாடல் விளக்கவுரை

உஷாதீபன்

வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக்

காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்

மோடு கொளடனல் மூரி நெடுங்கடல்

நாடு முற்றிய தோஎன் நண்ணிற்றே…

திரையொரு கனைகடல் செல்வன் சென்னிமேல்

நுரையெனும் மாலையை நுகரச் சூட்டுவான்

சரைஎனும் பெயருடைத் தடம்கொள் வெம்முலைக்

குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே…

வீடில் பட்டினம் வௌவிய வேந்தென – மலையிலிருந்து புறப்பட்ட காட்டாற்று அருவியானது – எப்படியிருந்ததெனில் – நாட்டையே சூறையாட வந்த வேந்தனைப் போல் தென்பட்டதாம்.

வௌவிய – என்ற சொல் கவர்ந்த என்று பொருள்படுகிறது இங்கே.

கைப்பற்று, பிடி, கவ்வு….என்று வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறது.

வண்ணக் குவளை மலர் மௌவி – இது நளவெண்பா…

வௌவிய வஞ்சி வலம்புனைய (கைப்பற்று) (இது புறப்பொருள் வெண்பா…)

பெருக்கெடுக்கும் அருவி அடர்ந்த காட்டை அரித்துக் கீழிறங்கியதுபோல், நாட்டையே  மூழ்கடிக்க வந்ததுபோல், மணல் மேடாகிய மார்பை உடைய சரயு நதியாகப்பிரவகிக்கும். அந்நதி நீர் அலைகள் நுரை பொங்க நின்றிருக்கும் கோலம், கடல்

காதலன் தலையில் மாலைபோல் சூட்டி மகிழ்வதற்கென்று அவற்றை நோக்கிச் செல்லும் என்பதேயாகும்..

இங்கே சரை என்பது சரயு நதியைக் குறிப்பதாகும். தடம் என்பது மணற்குன்று-அகன்ற மார்பைக் கொண்ட மணற்குன்றிற்கு நடுவே பாயும் சரயு நதி என்பதாகப் பொருள் கொள்ளலாம்.