அப்பாவால் முடிந்தது
ஒற்றை மாம்பழம்
இடதும் வலதும்
அக்கா தம்பி
எனக்கு மட்டும்
நடு பாகம்.
ஃப்ரிட்ஜில் வழிகிற
பழங்களில் இல்லை
அன்றைக்குத் தின்ற
கதுப்பின் சுவைகள்..
கருப்பு வெள்ளையில்
படமோ பாடல்களோ
அந்த நாட்களுக்காய்
தவமிருந்த களிப்பு.
விரல் நுனியில் தேயும்
ஆயிரம் படங்கள்
அதிலொரு துளிகூட
இருந்ததில்லை..
வாசலில் வீழ்கிற
கல்கி, விகடன்
தொடர்கள் படிக்கப்
போர்கள் வெடிக்கும்
நிறங்கள் பலவாய்
சீந்தவே ஆளில்லாமல்
வராண்டாவெங்கும்
வண்ணப் பத்திரிக்கைகள்..
மார்கழிப் பாசுரம்
பாடிய குளிரில்
கோண்டு மாமாவின்
கோபம் தாங்கிக்
கொஞ்சமாய் உள்ளங்கையில்
நெய்வழியும்
பொங்கல் சுவை.
நட்சத்திரங்களால்
எந்நாளும்
முடிந்ததில்லை..

மிகவும் அருமை
தலைப்பு அருமை
செவிக்கு அமுதாகும்
கவிநயம் தனிச் சுவை!
வத்ஸலா மேடம், லக்ஷ்மி மேடம், கவிஞர் ஐயா.. அனைவருக்கும் நன்றி..
யதார்த்தத்தின் உச்சம்!