
அந்த அம்மன்கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் இளைஞன், ஒரு ஓவியன் என்பது முதலில் நிறையப் பேருக்குத் தெரியாது.
புதிதாக அந்த ஊருக்கு வந்த அவன், பொதுவாக யாரிடமும் பேசுவதில்லை.
கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவன், சில சமயங்களில் கரிக்கட்டியைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை வரைவதும், அழிப்பதுமாக இருந்ததை பூசாரி தான் முதலில் கவனித்தார்.
அந்த ஊரில் சந்தை கூடும் நாளில், மைதானத்தில் அவனுக்காக ஒரு இடம் ஒதுக்கி, வண்ணக் கலவைகளும் வாங்கிக் கொடுத்தார்.
ஒரு மணி நேரத்தில் அழகான ஓவியம் வரைந்து முடிக்க, அவனுக்கு அன்று நல்ல வருமானம் கிடைத்தது.
அத்தோடு சமூக வலைத் தளங்களிலும், அந்த ஓவியத்தைப் பற்றி பரவலாக பேசப்பட்டது.
மறுநாளே அந்த ஓவியத்தின் சாயலாக ஒரு இளம்பெண் வந்தாள்.
தானும் அந்த ஓவியனும் காதலித்ததாகவும், அந்தக் காதலை எதிர்த்த அவளது தந்தை அவனைத் தாக்கியதால் மூளை பாதிக்கப்பட்ட அவன், பழைய நினைவுகளை மறந்து இப்படித் திரிவதாகவும் சொன்னாள்.
அவனைக் கண்டுபிடிக்க உதவிசெய்த பூசாரிக்கு நன்றி சொல்லி, அவனை கையோடு அழைத்துச் சென்றாள்.
அனைத்தையும் மறந்தாலும், ஆத்மார்த்த காதலை மறக்க முடியுமோ?

சிறப்பான கற்பனை,வாழ்த்துக்கள்.