வேடிக்கை மனிதரைப் போல/அழகியசிங்கர்

       நான் கவிதை எழுதுவதால்
        நான் ஒரு வேடிக்கை 
        மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்
        ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்
        அப்பாவி என்கிறார்கள்
        எதையும் சாமர்த்தியமாக 
        முடிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்
         எப்போதும் கவிதை எழுதுவதால்
        சோம்பேறி என்கிறார்கள்

        ஆனால் –
        எனக்கு முன்னால் பலர்
        வேடிக்கை மனிதர்களாக
        தென்படுகிறார்கள் 

        அரசியல் வாதிகளை
       எடுத்துக் கொள்ளுங்கள்
        மக்களுக்கு அதைச் செய்கிறேன் இதைச் 
        செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்கிறார்கள்
        ஆனால் அவர்களுக்கே தெரியும்
        ஒன்றும் செய்யப் போவதில்லை என்று
        மக்களை ஏமாற்றுகிறார்கள்
        அவர்கள் வேடிக்கை மனிதர்கள் இல்லையா? 

        24 மணி நேரமும் விடாமல்
        தொடர் பார்க்கும் 
        என் மனைவி வேடிக்கை மனுஷிதானே 

        அலுவலக வாழ்க்கையையே
        கட்டிக்கொண்டு அழும்
        அலுவலக நண்பர்கள் பலரைத் தெரியும்
        அவர்களும் வேடிக்கை
        மனிதர்கள்தானே

        எப்போதும் குடித்துக்கொண்டே
        இருப்பவன் 
        குடியைத் தவிர வேற சிந்தனை இல்லாதவன்
        வேடிக்கை மனிதனா இல்லையா? 

        எத்தனைப் பேர்கள் பெண் பித்துப் பிடித்து
        அலைகிறார்கள்
        வாழ்க்கையில் எதிலும் திருப்தி இல்லாத
        மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
        அவர்கள் எல்லோரும் வேடிக்கை
        மனிதர்கள்தானே

         சுயநலக் காரர்களை 
        வேடிக்கை மனிதர்களாகக் கூற மாட்டீர்களா?

         அந்தக் காலத்தில்
        பாரதியும் ஒரு வேடிக்கை மனிதனாக
        இருந்திருக்கிறான்.

        சதா காலமும் புத்தகம் படித்துக்கொண்டும்
        எழுதிக்கொண்டுமிருந்த க.நா.சு
        புத்தகம் படிக்காதவர்கள் முன்
        வேடிக்கை மனிதராகக் காட்சி தந்திருக்கிறார் 

        இன்னும் 
        எத்தனையோ
        சொல்லிக்கொண்டு
        போகலாம் தானே

        சொல்லிக்கொண்டே போகலாம்
        வகைவகையாய்
        வேடிக்கை மனிதர்களைப் பற்றி
        நம்புங்கள்
        வேடிக்கை மனிதர்கள் 

        காலம் இது இது இது.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 19 டிசம்பர் 2021
திண்ணையில் வெளி வந்தது.)

One Comment on “வேடிக்கை மனிதரைப் போல/அழகியசிங்கர்”

  1. கவிஞன் இவ்வுலகத்தில் வேடிக்கை மாந்தந்தான். அவன் கண்ணில் பட்டுக் கருத்தில் மிளிர்ந்து கவிதை வருவது அவனுக்கு மட்டுமே சாத்தியம். இது போன்ற வேடிக்கை மனிதர் பெருகட்டும்

Comments are closed.