அவளும்தான்……


வளவ. துரையன்


சபரியைப் போல
இராமனின் வருகைக்கு
விராதனும் கவந்தனும் கூடக்
காத்திருக்கிறார்கள்

நோக்கங்கள்
வேறு வேறாயினும்
எதிர்பார்ப்பு ஒன்றுதானே?

ஒரு நீர்த்துளியாவது
விழுமென்றுதான் அந்த
ஒரு முளை வெளியே
வருகிறது

அதன் எதிர்பார்ப்பு
அன்று கருகுகையில்
அது இடும் சாபம்
கருக்குழந்தையும் கூடத்
தாங்கமுடியாது

சிறுபுழுவை அலகில்
தூக்கிக் குஞ்சிற்காக
விரையும் குருவிக்குத் தெரியும்
கூடு செல்லும் வழி

பாதை இருட்டானாலும்
பறந்து செல்லும் நம்பிக்கை

ஆமாம்

இராமனை எதிர்பார்த்து
சூர்ப்பனகை கூடக் காத்திருக்கிறாள்

One Comment on “அவளும்தான்……”

Comments are closed.