மலையழகு அம்மாள் மரணமான தினத்தன்று
நல்ல மழை
நுரையீரல் புற்றுநோய் முற்றிப் போன நிலையில்
இரு தினங்களுக்கு முன்பு தான் தெரிய வந்திருக்கிறது
மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போதே
உயிர் பிரிந்து விட்டிருக்கிருக்கிறது
இறுதிச்சடங்கில் கூலிக்கு மாரடிக்க
அழைத்து வரப்பட்டவள்
இடைவிடாது ஒப்பாரி வைத்துக்
கொண்டிருந்தாள்
சுடுகாட்டுக் கொட்டகையருகே அடர்த்தியாய் வளர்ந்திருந்த
கொடுக்காப்புளி மரத்து மைனாக்கள்
சத்தமெழுப்பி கொண்டே இருந்தன
அவரது இளைய மகனின் வருகைக்காக காத்திருந்தார்கள்
கொள்ளிப்பந்தத்தின் நுனி கருகுகிற வரையில்
அவன் வரவே இல்லை
அந்திமக் கிரியைகள் முடித்து வீடு திரும்பலில்
ஆற்றுக்கரையில் யாரோ ஒருவர்
யாரோ ஒருவரின் கைகளை பிடித்துக் கொண்டு
சொல்லிக் கொண்டிருந்தார்
‘இன்னும் ரெண்டு வருசம் இந்த அம்மா
இருந்திருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்..’
இழப்பின் வலி/வேலாயுத முத்துக்குமார்
