பேயைக் கண்ட அனந்தர்/அரவிந்த் சுவாமிநாதன்


சாரதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே அதுபற்றிய ஆய்வுகளில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும் என்று உறுதியுடன், பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் அந்த வீடுகளில் தங்கினார். இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை.

ஒருநாள்… வராகநகர் மடத்துக்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேயிருப்பதாகவும், இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர்.

சுவாமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டிற்குப் போய்த் தங்கினார்.

நள்ளிரவு நெருங்கியது.

சுவாமிகள் பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.
இப்படியே சிறிது நேரம் கழிந்தது.

அப்போது…

அவர் அமர்ந்திருந்த அந்த அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகப் பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றின. அவை மிகுந்த உக்ரத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தன.

சுவாமிகளின் ரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது.
என்ன செய்வதென்று புரியாத அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார்.

உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, “மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும்” என்று கூறிவிட்டு உடன் மறைந்தது.

அடுத்த கணம், அந்த மாயக்கண்களும் மறைந்து விட்டன.

தான் மறைந்தாலும் கூட தனது அன்புச் சீடனுக்காக, சூட்சும உருவில் வந்து தக்க சமயத்தில் உதவி, நல் வழிகாட்டினார் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். குருவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.

திரிகுணாதீதானந்தர் மிகச் சிறந்த மனிதர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ராமகிருஷ்ணரின் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பிக்கப்பட்ட ‘உத்போதன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். விவேகானந்தரின் ஆணையை ஏற்று அமெரிக்காவிற்கு வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பச் சென்ற துரியானந்தர், அங்கிருந்து திரும்பியதும் அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர்தான்.

வட கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வேதாந்த சங்கத்தின் தலைவராகத் தம் வாழ்நாள் இறுதி வரை பணியாற்றினார் திரிகுணர். முதன் முதலில் மேற்குலகில் இந்துக்களுக்கு என்று ஒரு ஆலயத்தை நிர்மாணித்த பெருமை சுவாமி திரிகுணாதீதானந்தரையே சாரும்.

ஒரு பைத்தியக்காரன் தவறுதலாக எறிந்த கைக் குண்டினால் காயம் பட்டு 1915ம் ஆண்டில் சான்பிரான்ஸிஸ்கோவில் உயிர் துறந்தார் சுவாமி திரிகுணாதீதானந்தர்.