வெயிலின் மூன்று சித்திரம்/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

மூன்று நாள்களாக கடும் வெயில்

ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும்
பேச்சில் வெயில் படிமமாகப் படிந்துள்ளது

கத்திரி வெயில் காலங்களில் கால்சட்டையோடுதான்
படுக்கைக்குப் போகிறேன்

கொஞ்சம் போல
வெயிலை பற்றிய நினைவுகள் வருகின்றன

உள்ளாடைகள் இல்லாத இரவுகள்
கூடுதல் சுகமாக மாறிவிடுகின்றன

அந்நேரம் பால்பேதம் பற்றி பாடங்கள் புரிகின்றன

ஆடைகளைக் களைந்து
ஆதாம் ஆனதாக அந்நேரம் ஒரு கனவு
பகல் கனவு மாதிரி ஒரு யோசனை

மழை நாளைவிட
வெயில் காலங்கள்
நினைவில் நீண்டிருக்கின்றன

அருந்தும் நீரின் அளவு கூடிவிடுகிறது
சிறுநீரின் அளவோ குறைந்துபோகிறது
அதிலும் வெயிலின் மஞ்சள் முகம்

மஞ்சள் கொன்றைகள்
பூத்துக் குலுங்கும் சாலைகள் முழுக்க
வெயிலின் சாயை

வெயில் தகிக்காத எருமைகள்
நீர்நிலைகளுக்குள் மறைந்து கொள்கின்றன

மழைக்கும் வெயிலுக்கும் இடையில்
மாறுவது பருவம் மட்டும் இல்லை

ஒரு மகத்தான மனித பரிமாணம்

2022 ஜுன் 23 காலை 8:19

One Comment on “வெயிலின் மூன்று சித்திரம்/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்”

  1. இந்த கடும்
    வெய்யலிலும்…
    துண்டோடு மனிதரகளும்
    துண்டில்லா மாடுகளும்
    சுதந்திரமாய்…தெருவெங்கும்
    சுற்றுகின்றன..வரப்போகும்
    மழை பற்றி கனவுகளோடு..!
    Well done my friend

Comments are closed.