
யாரையோ எதிர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்
அது யாருக்கோ பிடிக்கிறது
எதிர்க்கவில்லையெனில் அதுவும்
யாருக்கோ
பிடிக்கிறது
அன்பு செலுத்துகிறீர்கள் எனில்
யாருக்கோ பிடிக்கிறது
யாருக்கோ
பிடிப்பதில்லை
இந்த யாருக்கோவை உங்களுக்கு
ஒருபோதும் தெரியாது என வைத்துக் கொள்ளுங்கள்
யாருக்கோவை அக்கறையின்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
எனில்
இறைவனுக்கு
உங்களை
பிடித்து விடுகிறது
2
நாலுபேர் உள்ளே வந்தால்
நாலுபேர் வெளியேறிவிடுகிறார்கள்
நாலுபேர் வெளியேறினால்
நாலுபேர் உள்ளே வருகிறார்கள்
ரொம்பவும் சின்ன அறைதான் போலிருக்கிறது
இந்த இருதயம்
3
கொலையுண்டவனுக்கு
நான்குபேர் என்றால்
கொலை செய்தவனுக்கும்
நான்குபேர்
உடைத்தவனுக்கும் நான்குபேர்
வைத்தவனுக்கும்
நான்குபேர்
4
நாலுபேர் இருக்கிறார்கள் என்று
நம்பித்தான் எல்லாவற்றையும்
செய்ய வேண்டியிருக்கிறது
நம்புவதற்கு நாலுபேர்
சந்தேகிக்க நாலுபேர்
நட்பாயிருக்க நாலுபேர்
பகைக்க நாலுபேர்
அன்பாயிருக்க நாலுபேர்
பாடையிலும் நாலுபேர்
நாலுபேருக்கு அதிகம்
எதிலும்
இல்லை
5
நாலு நாலுபேராக வந்து
நாலுநாலு பேராக சென்று
நாலுபேர் வந்தார்கள் நாலுபேர் சென்றார்கள்
என அறிந்து முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்
நாலுபேரைக் குறை சொல்லி
நாலுபேரை நிறை சொல்லி
முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்
நான்குபேரை சுத்தமாக
அறிந்து கொள்வதற்குள்
நாலுபேர் வந்து விடுகிறார்கள்
இவ்வளவு சிறிய பயணத்திற்கு
எவ்வளவு பெரிய
போட்டி ?
6
நாலுநாலு பேராகப்
போய்க்கொண்டிருப்போம்
நாலுநாலு பேராக
வந்து
கொண்டுமிருப்பார்கள்
வேறொன்றும் இல்லை
என்றும்
தள்ளி விட முடியாது
வைத்துக் கொள்ளவும் முடியாது
நான்கு திசை வழியாகவும் உள்ளேயும்
வரலாம்
வெளியேறவும் செய்யலாம்
