விநாயகர்/ ஆர்.வத்ஸலா

விநாயகர் வருவதில்லை
எங்கள் வீட்டிற்கு
ஆண்டுக்கொருமுறை

அவர் எங்களுடனேயே
இருக்கிறார்
எனக்கு நினைவு தெரிந்த நாளாய்

எங்கம்மாவின்
இஷ்ட தெய்வம் அவர்
பொங்கல் நவராத்திரி
கிருஷ்ண ஜெயந்தி
தீபாவளி
எல்லாவற்றிலும்
பிரதான பலகாரம்
எங்கள் வீட்டில்
கொழுக்கட்டை தான்
அம்மாவுக்கு நன்றாக
செய்யத் தெரியாத
ஒரே பலகாரமும்
அது தான்

அம்மாவுக்குத் தெரியாமல்
கல் போன்ற மேல் மாவை குப்பையில் போட்டு விட்டு
விதவிதமான பூரணங்களை ரசித்து உண்போம்
அப்பா உள்பட

பல பிள்ளையார்கள் உண்டு
பூஜையறையில்
பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்
ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்குப் பிள்ளையார்
நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானியப் பிள்ளையார்
கற்பனை வளத்தால் மட்டுமே அது பிள்ளையார்
என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்ட
நாள் நட்சத்திரம் பார்த்து
வெட்டிய எருக்கம் வேரில்
செதுக்கப் பட்ட
அரிய பொக்கிஷ
பிள்ளையார்
மரப் பொடியில் அருமையாக செதுக்கப்பட்ட
பிள்ளையார்

திருமணமானதும்
அம்மா ‌பிடித்த
முதல் பிள்ளையார்
ஒரு மாதிரி இருந்ததால்
எங்கள் வீட்டில் களி மண் பிள்ளையார்
கிடையாது
மற்றபடி விநாயகர்கள்
எல்லோரும்
எங்களுடன்
நிரந்தரமாக

One Comment on “விநாயகர்/ ஆர்.வத்ஸலா”

Comments are closed.