
துறவைத் துறத்தல்
ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு அறிவித்தார். பின்னர் மடாலயத்தை நடத்தும் பொறுப்பைத் தமது தலைமை சீடரிடம் அளித்துவிட்டு வெளியேறினார். கானகத்தை விட்டு நகரத்திற்குச் சென்ற ஷிமிஸு, திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் அவர் மடாலயத்திற்கு ஒரு சிறு பையுடன் திரும்பி வந்தார். அவரை யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
