தெரு நாய்கள்/ப.உ.தென்றல்

எதற்காக
இப்படிச் சலிக்காமல்
குரைக்கின்றன?

ஆவலால்-
ஆராய்ச்சி செய்ய
அருகில் சென்றால்
கடி வாங்குவது
உறுதி.

இரவில் என்றால்
தூக்கம் கெடுவது
நிச்சயம்.

காரணங்கள்
பலவாறு இருக்கலாம்.

ஒன்றைப் பார்த்து
மற்றொன்று.
மற்றதைப் பார்த்து
இன்னொன்று.
எதற்கென்றே
அறியாமல்,
கூட்டம் கூட்டமாய்.

பெரியதுடன்
சிறியதும்…
துள்ளிக் கொண்டு
தன் பங்கை
ஆற்றுகிறது.

கல்லை
வீசித்தான் பார்ப்போமா?

எரிச்சலிலும்,
சற்று –
பொறுமை காக்க
வேண்டி இருக்கிறது.

எதிர்வினை உண்டு
என்பதனால்…