
கற்பூரம் கரைகயிலும்
பொற்புடைய வாசம்தர..
கரும்புத்தான் பிழிகயிலும்
கனிரசமாய் இனிப்புத்தர
விற்கள்தான் வளைந்தாலும் வேகமுடன் அம்புயெய்த
கற்கள் சிலை யாகிவர
உளிகள்தரும் வலி தாங்க..
நற்பொழுதாம் சுதந்திரத்தை நாம்பெறவே
வேதனைகள் தாங்கியொரு விடுதலைக்கு பாடுபட்டார்..
செக்கிழுத்தார்..
செங்கதிரை விழிபதித்தார் தனைத்தந்தார்
தக்கதொரு தலைவரென காந்திமகான் நெறியதனை
எக்கணமும் முன்னெடுத்து இன்னுயிரை நமக்களித்தார்..
இக்கரைக்கும் அக்கரைக்கும் இனமானக் கப்பல்விட்டார்..
தடியடிகள் சிறைவாசம் தாங்கொனா கொடுமைகளை
படிப்படியாய் ஏற்றவராய் பாரதமே விடுதலைபெற
இடியோசை அடக்குமுறை எதிர்கொண்ட தியாகியவர்.!
வ.உ.சி.என்றாலே
வாய்மணக்கும்..
வண்டமிழர் குலம்நினைக்கும்..
செக்கிழுத்த தியாகமகன் தந்துவிட்ட தன்மானம்
எக்கணமும் நாம் மறவோம்.. என்றென்றும் நினைத்திருப்போம்!
வாழ்க வ.உ.சி..
வணங்குவோம் வாரீர்!
