மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23/அழகியசிங்கர்

நிலவும் நிலவுகளும்

தேவதச்சன்

எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல

பேரூரும் அல்ல

எங்களூரில் நான்கு கிணறுகள்

மூன்று ஊருணிகள்

ஒவ்வொரு இரவும்

எங்களூரில்

ஏழு நிலவுகள் வந்து

அழகு கொள்ளை கொள்ளும்

தண்ணீரில் கல் எறிந்து

ஒரே நிலவை

ஆயிரம் நிலவாய்

ஆக்குவோம் நாங்கள் சிறார்கள்.

வெறுமனே

பொறுமை காத்து

ஆயிரம் நிலவுகள்

ஒரே நிலவாய் கலப்பதை

பார்ப்பார்கள் பெரியவர்கள்

இப்போது ஊருணியை

பஸ் நிலையங்கள்

ஆக்கிவிட்டார்கள். மேலும்

கிணற்றை மூடி

குப்பைத்தொட்டியாக மாற்றி

விட்டார்கள்.

இப்போது

தனியான ஒரு நிலவு

எங்கள் ஊர்

மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது

நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் – பக்கம் : 64 – விலை : ரூ. 40 – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – தொ பேசி : 91-44-24993448