
ஆகாயப் பாதைகளின்
முச்சந்தி நிலையத்தில்
ஐரோப்பிய அரசுகளின்
தூதுவர் இருவர் –
கைகுலுக்கல் –
பல்தெரியாப் புன்னகைகள் –
பரஸ்பரத்தை விசாரிக்கும்
உச்சகட்ட நாகரிக
உயிரின்மை.
இத்தனையும் ராஜ
தந்திரத்தின் சரக்கூடம்.
ஊடே பறந்துவந்து
உயிரில் தைத்து
எரிகிறது இன்று
காலமுக அக்கினியை
தாங்கிவரும் செய்திஒன்று.
இருவரின் கண்களிலும்
மானுடத்தின் தத்தளிப்பு.
தந்திரத்தின் தடங்களிலே
தேய்ந்து உயிரிழந்த
சொல்லின் பருப்பொருளாய்
சொற்களையும் பற்களையும்
சிதறடித்த
சிறுதாதுத் திடுக்கீடு!
சுவடுபிறழ்ந்து,
மாறியது பரிமாணம்.
சரித்திர வெளியில்
சந்தித்து நின்றன
ராஜதந்திரிகளின் கபாலங்கள்:
‘உன் மொழியில்
நான் மனிதன்
என் மொழியில்
நீ மனிதன்.
எல்லா மதங்களுக்கும்
உயிர்மீது பெருநேசம்.
உனக்கும் எனக்கும்
ஒருமித்த மூதாதைத்
தர்சிகளில் பார்வையிலே
நான் நீ என்றெழுந்த
முகமூடிப் பட்டங்கள்
அடையாளம் ஏதுமற்ற
அந்தரத்தில் தான் ஆடும்.
இருந்தும் எரிகிறது
காலத்தில் ரஸ்தாவில்
புகைமடியாத் தேதிஒன்று
என்னை நீ
சின்னாபின்ன மிட்ட
ஸ்ரீலங்கா ஜூலை 1983.
சரித்திரக் கருவினுள்
சந்திர கலசத்தைக்
குதறிய ஒன்பது
ஓநாய்த் தினங்கள்’.
மறுகணம் –
பிறழ்ந்த வெளிதிரும்ப
மறைந்த உதடுகள்
இறுகித் தோன்றி
உதிர்கின்றன
உபயோகம் ஏதுமற்ற
சொற்கள், அவற்றில்
அரசாங்க முத்திரை
பதிக்கிறது புன்னகை.
அதே கணம் –
ராஜீயக் கடப்பாறைத்
தாக்குதலில் எங்கோ
வீறிடுகிறது ஒர்
சின்னஞ்சிறு குழந்தை
அதன் உதிரவெளி
மானுட இரவாகி
உலகை மூடுகிறது.
மரணத்தை மீறி
உதிக்கிறது அங்கு ஒரு
அணையாத சுடர்.
(ஜூன் 1985)
லயம், ஜனவரி – மார்ச் 1986.
