இனிக்கும் தமிழ் – 146/டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம் – அவன் பாதம் சேர்

வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. சுத்தி நிற்கிறார்கள். மகன்களும்
மகள்களும் வந்து இருக்கிறார்கள். மகள் மடியில் தலை வைத்து படுத்து
இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா”
என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்தவர்
இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள்.

அப்படி ஒரு காலம் வரும் முன்னே திருதுருத்தி என்ற ஊரில் உள்ள சிவனின்
பாதம் சேர் என்கிறார் நாவுக்கரசர்….

பாடல்

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பொருள்

வஞ்சியன = வஞ்சிக் கொடி போன்ற
நுண்ணிடையார் = சிறிய இடையை கொண்ட
வாள்தடங்கண் = வாள் போன்ற நீண்ட கண்கள்
நீர்சோரக் = கண்ணீர் சிந்த
குஞ்சி = தலை முடி
குறங்கின் மேற் = மடியின் மேல்
கொண்டிருந்து = வைத்து படுத்து
கஞ்சி = கஞ்சி
அருத்தொருத்தி = அருந்த, ஒருத்தி
கொண்டுவா = கொண்டு வா
என்னாமுன் = என்று சொல்வதற்கு முன்
நெஞ்சே = என் மனமே

திருத்துருத்தியான் = திருத் துருத்தி என்ற ஊரில் உள்ளவனின் (சிவனின்)
பாதஞ் சேர். = பாதம் சேர்வோமாக