வெங்கட்சாமிநாதன் பற்றி சில

அழகியசிங்கர் 

(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று.  அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார்.  அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)      

சமீபத்தில் நான் பெங்களூர் சென்றேன்.  கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரைச் சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமலிருந்து விட்டால் பெங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாகத் தோன்றும்.

            மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம்.  ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பெங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும்.

நான் மதிக்கும் வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பெங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பெங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.   பெரும்பாலும்  சென்னையில் ஒவ்வொரு முறை நான் அவரைப்  பார்க்கும்போதும் அவருடைய கோபத்தையே பார்ப்பதுபோல் தோன்றும்.

        தில்லியை விட்டுவிட்டு அவர் சென்னைக்கே ரயிலில் பயணம் செய்தபோது, அவர் மனைவி நகைகள் சில  திருடு போய்விட்டன.  இதை வெளிப்படுத்தும்போது வெ சா பதட்டத்துடன் காணப்படவில்லை.  சொன்னதில் வருத்தம் இருந்தது.  ஆனால் யார்மீதாவது அவருக்குக் கோபம் இருந்தால் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார்.  மறக்கவும் மாட்டார்.  உறுதியாக இருப்பார்.

  80 வாக்கில் சிறு பத்திரிகைகள் மூலம் அவரைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பதுண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு தேடி நான் டில்லிக்குச் சென்றேன்.  

            நான் இருந்த இடமும் அவர் இருந்த இடமும் எங்கோ இருந்தது.  பாஷை புரியாத அவஸ்தை.  எனக்கோ எல்லார் வாயிலும் அகப்பட்டுக் கொள்கிற இந்த வெங்கட் சாமிநாதனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்ற ஆவல்.  என் முதல் சந்திப்பு அப்போதுதான் நடந்தது.

            என்னைப்பற்றியெல்லாம் விசாரித்துப் பேசிக் கொண்டே வந்தவர் ஒரு அறையைக் காட்டினார். 

            “என்ன?” என்றேன்.

            “இதில் உள்ள புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.

            எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த அறை முழுவதும் சுவரை ஒட்டி புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  சில புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.  பின், “இந்த டில்லியில் பஸ்ஸில் போவது மோசமானது.  நான் உங்களைக் கொண்டு விடுகிறேன்  சிறிது தூரம்,” என்றார். 

          ‘நேரில் அவருடன் பேசும்போது இவ்வளவு தன்மையாகப் பேசுகிறாரே என்றுதான் தோன்றியது. ஆனால்  பிரமிள், அசோகமித்திரன், ஞானக்கூத்தன் என்று யார் பெயரையாவது குறிப்பிட்டால் போதும் சண்டைக்கு வந்துவிடுவார். 

  ஏனோ அன்று தில்லியில் அவருடன் ஏற்பட்ட பஸ் பயணம் போது கண்டக்டருக்கும் ஒரு சில பயணிகளுக்கும் பெரிய கலகலப்பு ஏற்பட்டது.  என்னுடன் என்னை ஒரு இடத்திற்குக் கொண்டு வர இருந்த வெங்கட்சாமிநாதனைப் பார்க்கும்போது, ஒன்றுதான் தோன்றியது. இவர் போகுமிடமெல்லாம் எதாவது சண்டை ஏற்படுகிறதே என்று. யாரையாவது பிடிக்கவில்லை என்றால் மோசமாக  அவர் எழுதாமல் இருக்க மாட்டார்.

   அவர் தில்லியிலிருந்து சென்னைக்கே  குடி வந்தபோது ஒரு மாசம் காலியாக இருந்த என் வீட்டில் தங்கியிருந்தார்.  பின் மடிப்பாக்கம் சென்று விட்டார்.  அங்கே சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொண்டார். 

            நான் அடிக்கடி அவரைச் சந்திப்பது வழக்கம்.  எதாவது உதவிகளும்  செய்வதுண்டு.  அவர் தன் சேமிப்புகளில் சிலவற்றை சில இடங்களில் வைப்புத்தொகை பண்ணி இருந்தார்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு.  பெங்களூரில் இருந்த என் உறவினரும் கிட்டத்தட்ட 10 லட்சம் வரை வைப்புத்தொகை செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வெ சாவும் அப்படி இழந்து விட்டார்.  அவர் இழந்த, ஏமாந்து போன பலவற்றை அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம்.  

    வெங்கட் சாமிநாதன் எப்போதும் பிடிவாதமானவர்.  அவர் சென்னைக்கு வந்தபிறகுதான் அவருடைய எழுத்துக்கள் பல புத்தகங்களாக வெளிவந்தன.  பல பத்திரிகைகளில் திரும்பவும் எழுத ஆரம்பித்தார்.  கூட்டங்களில்  கலந்துகொண்டு பேசினார்.  அவர் டில்லியிலிருந்தபோது சிலகாலம் எழுதாமல் இருந்தார்.  அப்போதே அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  இதெல்லாம் ஆரம்பத்தில்.  அதன் பின் அவர் சென்னையில் அதிகமாகவே எழுதினார்.           

      அடிக்கடி போன் பண்ணும் பழக்கம் என்னிடம் இல்லை.   எப்போதாவது வெங்கட் சாமிநாதனுக்குப் போன் செய்தால், “என்ன உன் குரு சொல்கிறபடி கேட்கிறாயா?” என்பார். அசோகமித்திரனையும், ஞானக்கூத்தனையும் என் குருவாகத் தீர்மானித்துவிட்டார்.  

            “நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை.  என்னையும் யாரும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்பேன்.

            ஆனால் என்னைப் பார்த்தால் நம்ப மாட்டார்.  ந பிச்சமூர்த்திக்கு ஒரு விழா எடுத்தோம்.  நான், ஞானக்கூத்தன், ராஜகோபாலன் என்று பலருடைய முயற்சியில் நடந்தது.  அக் கூட்டத்திற்கு ஜி கே மூப்பனார் தலைமை வகித்தார். வெங்கட் சாமிநாதனும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மறக்க முடியாத கூட்டம் அது.ஒரு முறை விருட்சம் வெளியீடாகவும், மையம் வெளியீடாகவும் கொண்டு வந்த புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தேன்.  அவர் உடனே விமர்சனம் எழுதி அனுப்பி விட்டார்.  ஸ்டெல்லா புரூஸ் எழுதிய கவிதைத் தொகுதியைக் கண்டபடி திட்டி எழுதி விட்டார்.  எழுதியதோடு அல்லாமல் விருட்சத்தில் போட வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்.  இல்லாவிட்டால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும் என்று பயமுறுத்தவும் செய்தார்.  நான் அதைப் பிரசுரம் செய்தேன்.  அதனால் ஸ்டெல்லா புரூஸ் கோபத்திற்கு ஆளாகாமலில்லை.  

            எதிர்பாராதவிதமாய் அவர் மனைவி இறந்து விட்டதால் தள்ளாத வயதில் வெங்கட் சாமிநாதன் பெங்களூரில் உள்ள புதல்வர் வீட்டிற்குச் செல்லும்படி ஆகிவிட்டது.  நான் அவரைச் சந்திப்பதும் நின்று விட்டது.  பங்களுரிலிருந்து யாரையாவது பார்த்தால் வெ சாவைப் பற்றி விசாரிக்காமல் இருக்க மாட்டேன். என் பையன் திருமணத்திற்குப் பத்திரிகை அனுப்பினேன். அவர் வாழ்த்தி பதில் எழுதினார்.  தொலைப்பேசியில் பேசவே எனக்கு அவரிடம் நடுக்கம்.  கோபத்துடன் பேசுவாரோ என்ற பயம்தான்.

            இந்த முறை பெங்களூர் வந்தபோது அவரை எப்படியும் பார்ப்பது என்று முடிவு செய்திருந்தேன்.  மகாலிங்கம் என்ற நண்பர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்.  அதே கம்பீரமான தோற்றத்துடன் வெங்கட் சாமிநாதன் இருந்தார்.  பல ஆண்டுகள் கழித்து நான் அவரைச் சந்திக்கிறேன். ஆனால் அதே கோபத்துடன் அவர் பேசினார்.  அசோகமித்திரனையும், ஞானக்கூத்தனையும் வம்புக்கு இழுத்தார்.   அவர் எதையுமே மறக்க வில்லை.  தேவை இல்லாமல் மற்ற இலக்கிய நண்பர்களைத் திட்டாமல் இல்லை.   வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல்தான் என்னைப் பார்த்தார். நம்பிக்கை இல்லை. நான் வேற கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்திருப்பார். அவரைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றியது.  அவர் வீட்டில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினார்.  அவர் ஒன்றே ஒன்றுதான் என்னைப் பார்த்துக் கேட்டார்.  “நீ ஏன் என் புத்தகங்களைப் படித்து விட்டு ஒன்றும் எழுதுவதில்லை,” என்று.

        அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர்தான் பலருடைய புத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதிக் குவிப்பவர்.  பொதுவாக நான் சிலருடைய புத்தகங்களை விமர்சிப்பதில்லை.  அதில் வெங்கட்சாமிநாதனும் ஒருவர்.  நான் எதையாவது எழுதப் போய் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் காரணம்.  

    நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்தபோது அவர் புத்தகம் எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். 

            அவருடைய, üஎன் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும்ý என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஒரு படைப்பாளியாக மாறாமல் விமர்சகராகவே கடைசி வரை இருந்துவிட்டாரே என்ற ஆச்சரியம் எனக்கு அவர் மீது உண்டு.  ஒரு புத்தகத்தைப் பாராட்டுவது என்பது எளிதான காரியமில்லை. 

            அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர் எழுதியவற்றைப் படித்துவிட்டு அவரைப் பற்றி இன்னொரு கட்டுரை எழுதுவதாக உள்ளேன்.