1.ஆற்றுப்பபடலம்

வளவ. துரையன்

                  

கம்பனைக் காண்போம்—2

பூனையும் பாற்கடலும்

வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொடங்குகிறான். எந்தப் புலவனும் நூல் தொடங்குமுன் அவையடக்கம் பாடுவது மரபு. கம்பனும் அவையடக்கம் பாடுகிறான்.

  ”ஓசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ” [4]

[ஓசை= ஒலி; பூசை=பூனை; அறைதல்=சொல்லுதல்; காசு=குற்றம்]

”ஒரு பூனை ஒலியைப் பெற்று உயர்ந்த பாற்கடலைப் பார்க்கிறது; அக்கடல் முழுதும் பாலால் நிரம்பி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது. அப்பூனையானது இப்பாற்கடல் முழுவதையும் நான் நக்கிக் குடித்து விடுவேன் என்றெண்ணி முற்படுகிறது. அதுபோல நான் என் விருப்பத்தால் குற்றம் இல்லாத இராமனின் கதையை முழுதும் சொல்லத் தொடங்கினேன்” என்று ஓர் அருமையான உவமையை வைத்துக் கம்பன் அவையடக்கம் பாடுகிறான்.