இனிக்கும் தமிழ் – 14


 டி வி ராதாகிருஷ்ணன்

தமிழ், பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.

ஆனால், பாவேந்தர் பாரதிதாசனுக்கோ..அவரின் உயிராகவே இருக்கிறது. அவரின் தமிழின் இனிமை கவிதை ஒன்றைப் பாருங்கள்..

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

என் கிறார்

ஆமாம்…எனினும் என்கிறாரே,,,ஏன்? என ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உயிர் இல்லையேல் ஒருவருக்கு சுவைக்க இனிப்பு ஏது?

கனி, கரும்பு, தேன்,பாகு,பால்,இளநீர் என அனைத்தின் சுவையும் உயிர்
இருந்தால்தானே அறிய முடியும்.அந்த உயிர் எனக்குத் தமிழ் என்றுள்ளார்.

ஆனால் ஔவையாரோ

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  -கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

என வினாயகரை வேண்டுகிறார்.

எப்போதும் ஏதெனும் ஒன்றை தந்துவிட்டு அதைவிட மதிப்புள்ள ஒன்றை பெற விரும்புவது மனித இயல்பு.ஔவை மட்டும் விதி விலக்கா…என்ன?
இனிப்புச் சுவை உள்ளவற்றைக்  கொடுத்து விட்டு அதனெனினும் இனிய இயல்,இசை, நாடகமாகிய முத்தமிழையும் வேண்டுகிறார்.

இராமலிங்க அடிகள்..இதையே..


தனித்தனியாய்  முக்கனிப் பிழிந்து வடித்து ஒன்றாக்கிக் கூட்டி
சர்க்கரையும், கற்கண்டின் பொடியையும் பருப்பும் தேனும் கலந்த கலவையைவிட சுவையானவன் இறைவன் என்கிறார்.


இவையெல்லாம் படித்த நாம் வரும் முடிவு..தமிழ்..தெய்வத் தமிழ் என்பதே!

   

ReplyForward