நாட்கள்

-புஷ்பால ஜெயக்குமார்

காலத்தைத் தொடுகிறாய் நீ

காலத்தின் உள் அசைகிறாய் நீ

நீ மறந்த காலம் 

உன்னுடனே உன் பக்கத்தில் 

சேமிக்கப் படுகிறது

தீராத காலம் 

உனக்கு அப்பாலும்

உனக்கு முன்னும் 

நீ அறியாத அறிந்த

உண்மையில் இருக்கிறது

உன் நினைவின் வழியே

நீ திறந்த 

உனது வெளியில்

உன் மனதின் ஆசையில்

வெளி உலகிற்கு 

கட்டிய கயிற்றை

இழுத்துப் பார்த்தபடி

பெருமை தேடிக்கொள்கிறது

கரைவதோ நகர்வதோ என

எல்லா திசைகளிலும்

எதையும் ஏற்றுக்கொள்ளும்

காலத்தைத் தாங்கும் 

இதயத்தின் ஓசை

தாளமிடுகிறது உன் நாட்களை