ஒப்பனையின் கனவுகள்/கோ.கணபதி சங்கர சுப்ரமணியன்

கடந்த காற்றின் காலிடறி மேகங்கள் முன்னகர்ந்து
மாயப்பரப்பின் பரவெளியில் மறைந்து போயின
முழுமையற்ற பூக்களின் முன்வண்ணம்
பனிவழியும் பிரேதசத்தில் பிரசன்னம்
அன்றைய இரவின் அகாலமரணத்தில்
மழைநாளின் நினைவுகள் மறந்து போயின
பனிக்காலக்  காற்றின் புதைவுகளில்
புராதனத்தின் நிழல்கள் நீண்டு உறங்கின
ஓலமிட்டு ஒலி தன்பெயரின் ரகசியத்தை
அடையாளங்களின் அவதானிப்பில் அலசிற்று
மழைத்துளிகளின் இடைவெளியில் மௌனத்தின்
அவசரம் அந்த நிமிட வசீகரத்தை வடித்துக் கொள்ள
தோற்றத்தை ஏற்றுக்குக்கொள்ளத் துடித்ததது
மயக்கநிலையின் மனவெளிக்குள்
மறைபொருளின் மடிதழுவ காற்றின் தோழமை
புனிதங்களைக் கடந்த தீவில் இரவில் பெய்த
மழையில்  கரைந்த இளவெயிலின் எதிர்மேகங்கள்
சூரியனையும் வண்ணத்துப்பூச்சியாகியது
பனிக்கட்டியின்  உள்நிறைந்த மாயத்திரவம்
உள்ளங்கை ரேகைகளில் உலர்ந்திருந்தன
வழிப்போக்கனின் வார்த்தைகளில் வெளிச்சத்தின்
கிளைவழிகள் பயணத்தின் பாதையை பிரசுரித்தது
காற்றின் கடைசிமூச்சில்இலைகளைச் சுமந்த
நிழல் இன்னும் அசையாதிருந்தது.

One Comment on “ஒப்பனையின் கனவுகள்/கோ.கணபதி சங்கர சுப்ரமணியன்”

Comments are closed.