கவிதைத் தொகுப்பு நூல்கள் 3/அழகியசிங்கர்

  


சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம். 
     புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று நினைக்கிறேன்.  மரபுக் கவிதைகளில் யாராவது தொகுப்பு நூல்கள் கொண்டு வந்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
     கவிதை என்றாலே பாரதிக்கு முன் பாரதிக்குப் பின் என்ற இரு பிரிவுகள் உருவாகி உள்ளன என்று தோன்றுகிறது.சி சு செல்லப்பாவின் ‘புதுக்குரல்கள்’ பாரதிக்குப் பின் வழி வந்த கவிதைகள்.
     சி.சு செல்லப்பா சொல்கிறார். பாரதி கவிதைகளின் உள்ளடக்கத்திலிருந்து பிச்சமூர்த்தியினதின் உள்ளடக்கம் வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
     கவிதை சொற்களில் இல்லை, ஒலிநயத்தில் இல்லை, கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக் காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது. 
     புதுக் குரல்கள் தொகுப்பில் இருபத்திநாலு கவிகள் எழுதிய அறுபத்து மூன்று கவிதைகள் இருக்கின்றன. 1930, 40 க்களிலேயே புதுக்கவிதை முயற்சி பிறந்தாலும், எழுத்து காலத்தில்தான் புதுக்கவிதை இனம் கண்டுபிடிக்கப்பட்டு நாமகரணம் இடப்பட்டது.

     இத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.

கி.அ. சச்சிதானந்தம் கவிதை அது.

     சொற்களால் வலை பின்னினேன்
     பின்னி முடியுமுன் ஓடிவிட்டது அது


     வண்ணங்களை வகைப்படுத்தி கலவைக்குழம்பில்
     கற்பனை  தூரிகையைத் தோய்த்து எட்டுக்குமுன்
     சேய்மைக்குப் போய்விட்டது அது


     நரம்புகளின்மேல் விரல்களை ஓடவிட்டு
     இசையில் பிடிக்குமுன் சென்றுவிட்டது அது


     விண்ணுள் சென்றதா, மண்ணுள் மறைந்ததா
     என்னுள் பாலம் அமைந்தது காலம்
     நடந்து சென்றேன்
     அமைதிப்பாழில் அழகுக் கோலம் தந்தது அது

ஹரி சீனிவாசன் கவிதை ஒன்றைப் பார்ப்போம்,

     புதுப்புடவை கட்டிப்
     போனவள் நான் 

     பூர்ண சுகம் பெறவில்லை
     புதுப்புடவை கட்டினாலும்        

“ எதிர் வந்தோர் கட்டினது எல்லாம்
என்னைவிடப் புதுப்புடவை

ஹரி சீனிவாசன் என்ற பெயரில் கவிதைகளும், சார்வாகன் என்ற பெயரில் கதைகளும் எழுதி உள்ளார்.

     சுந்தர ராமசாமியின் கவிதை ‘வாழ்க்கை’


     பாம்பைக் கண்டதும்
     கல்லெடுத்தாய்
     நான் கல்லானேன் 

     வாளைக் கண்டதும்
     வில்லை வளைத்தாய்
     வாளுரை யானேன்


     மதயானை வந்ததும்
     அலறியடித்தாய்
     வாலிலூசல் பயின்றேன்.


     பின்னொரு நாள்
     முச்சந்தியில்
     சறுக்கி விழுந்து
     செத்தேன் நான்


     செத்துச் செத்துப்
     பிழைத்தாய் நீ
     வாழ்ந்து வாழ்ந்து
     அழிந்தேன் நான். 

     வைதீஸ்வரனின் ‘உதய நிழல்’ என்ற கவிதை

     ஒரு இலையின்
     பாதி இருள்.
     அரை விழிப்பின்
     ஒரு கனவு 
     இரவிக்கு
     இடுப்புக் கடல்


     ஒளி ஊன்றும்
     ஒற்றைக் கால்
     அனல் மணக்கும்
     இதழ் மது
     காலம் நுழைந்த
     ஆடை வெளிச்சம்


     புலனைக் கலக்கும்
     பனிக்கூச்சம்
     கருமை வழிவந்த
     சுவடு.
     நனவைத் தூண்டும்
     தீப்பந்தம்


     அது விடிவா?
     முடிவின்
     முன் நிலவா


     எல்லாக் கவிதைகளும் ‘எழுத்து’  பத்திரிகையில்  வெளிவந்தன.  இத் தொகுப்பில் பல நீண்ட கவிதைகள் உள்ளன.  சி சு செல்லப்பாவை மெரினா என்ற தலைப்பில் நீண்ட கவிதை இத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார்.
     ஆரம்பக் கால தொகுப்பு என்பதாலும், புதுக்கவிதையை ‘எழுத்து’ அறிமுகப்படுத்தியது என்பதாலும் பெரும்பாலான கவிதைகளில் தெளிவில்லை. சொல்ல வந்ததில் புரியக்கூட இல்லை. இதைத் தொடர்ந்து மேலும் சில கவிதைத் தொகுதிகளைப் பார்க்கலாம்.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 27 நவம்பர் 2022 வெளிவந்துள்ளது)