சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவமாகும். இரண்டாவது வீடியோ பிஹாரில் நிகழ்ந்த மனிதநேயமிக்க நெகிழ்ச்சியான சம்பவமாகும்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் பசியை போக்க திருமண வீட்டில் நுழைந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மணமக்களின் உறவினர்கள், அந்த மாணவரை பிடித்தனர்.

“உன்னை யார் அழைத்தார்கள். எப்படி இலவசமாக சாப்பிடலாம்” என்று வசைபாடி அந்த மாணவரை பாத்திரங்களை கழுவ செய்து தண்டனை கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. திருமண வீட்டாருக்கு டன் கணக்கில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதே திருமண பின்னணி கொண்ட மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ், தனது பசியை போக்க அங்கு நடைபெற்ற திருமண விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்தார். பந்தியில் அமர்ந்து வயிறார சாப்பிட்டார். அதோடு மணமக்களையும் மனதார வாழ்த்த மேடையேறினார். “நான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறேன். அதிக பசியாக இருந்தது. அழையா விருந்தாளியாக இங்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டேன். மனச்சாட்சி உறுத்தியதால் உங்களிடம் உண்மையை கூறுகிறேன்.உங்களது திருமணத்துக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

கல்லூரி மாணவர் அலோக் யாதவ் கூறியதை இன்முகத்தோடு கேட்டு ரசித்த மணமகன் அதுல் ராஜக்,”உங்கள் விடுதிக்கும் உணவை எடுத்துச் செல்லுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டார்.

மணமகனின் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்த கல்லூரி மாணவர் அங்கிருந்து பிரியாவிடைபெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதோடு மணமகன் அதுல் ராஜக்குக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.