இலை மறை வெயில்

வேலாயுத முத்துக்குமார்  


அடைமழைக்கால நாளொன்றில்  

நடுவீட்டிற்குள் வந்து விழுந்த வெயில் 

கூடவே வலப்பக்க முடுக்கிலுள்ள     

பப்பாளி இலைகளின் நிழலை  

எடுத்து வந்திருந்தது

உள்வருவதும் வெளிபோவதுமாக

அசைந்தாடிய இலைமறை பிம்பங்கள்    

அடைவுகாலத்தில்  வீட்டோடு 

முடங்கியிருக்கின்ற பிள்ளைகளுக்கு

புதிய ஏற்பாட்டை முன்மொழிய 

ஆளுக்கொன்றாக இலைகளை 

பிரித்துக் கொண்டவர்கள் 

தங்களுக்கான கண்ணாமூச்சியை 

விளையாட தொடங்குகிறார்கள்

வெயில் சாய்ந்த அந்தியில் 

நிழல் விலகிச்சென்ற கணங்களில் 

அவர்கள் வரைந்து பழகுகிறார்கள்

பச்சையம் மிகுந்த பப்பாளி இலைகளையும்

கூடவே வெயில் எடுத்து வந்திராத 

அதன் கனிந்த பழங்களையும்