லட்சுமி மணிவண்ணன் கவிதை

அச்சு அசல் ஒரு நாய்க்குட்டி
குழந்தையைப் போலவே இருக்கிறது
குழந்தையைப் போலவே விளையாடுகிறது
குழந்தையைப் போலவே குதிக்கிறது
ஆர்ப்பரிக்கிறது
குழந்தையைப் போல
கனவு காண்கிறது

ஏதோ ஓரிடத்தில் இருந்து
குழந்தை நாயாகிறது
குழந்தை பூனையாகிறது
நரியாகிறது
எலியாகிறது
மனிதனாகிறது

பல ஊர்களுக்கும்
பிரியும்
முச்சந்தி போலொரு இடம்

அதனதன்
ஊர்களுக்கு
அதிலிருந்து
திரும்பிச் செல்கின்றன

பல ஊர்களுக்கு
பல கிளைகளுக்கு

குழந்தை தன்னில் நீங்கியதும்
உரியவை வந்து
எடுத்துச் செல்கின்றன
தங்கள் தங்கள்
மிருகங்களை