வளவ. துரையன் கவிதை

இன்னும் நேரம் இருக்கிறது

இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
எனக் கவலை கொள்கிறது

மரப்பொந்துகளெல்லாம்
மறைந்து மாய்ந்து போக
மாடமாளிகைகள் தேடுகிறது
தேநீர்க்கடை அமர்ந்து
தெருத்தெருவாய்க் கூர்ந்து பார்க்கிறது

எவர் அகப்படுவார் என்று
ஏக்க அழுகை வெளிவருகிறது
உருளும் விழிகள்
கீழே விழுந்து தவிக்கின்றன

அழுதுகொண்டு ஒருகுரல்
அரற்றும் வகை ஒரு குரல்
ஏளனமாய் ஒருகுரல்
எரிப்பதுபோல் ஒரு குரல்
இன்னும் அலறுகிறது ஆந்தை

மயானக் காவலாளி
பார்த்துக்கொண்டிருக்கிறான்

இன்னும் நேரம் இருக்கிறது.