ஒரு சிறிய தட்டும் ஒன்பது திருகாணிகளும்/எஸ் வி வேணுகோபாலன்

அடியுண்ட கணம்
பல்லியின் வால் போல்
துடித்துக் கொண்டிருந்த
இதே இடது கை மணிக்கட்டும் விரல்களும்
இப்போது அமைதியாய்…
இன்னும் அன்பாய்..
சற்று பாரம் கூடியதாய்…

எழுதிக் கொண்டிருக்கும் கையைத்
தற்காத்துத்
தன்னை முன்னிறுத்திக் கொண்ட தியாகம் பாராட்டி
ஓர் அழகான தொட்டிலில் இப்போது இடது கை!

ஓடோடி உதவிக்கு
வந்தோரை
சீரிய மருத்துவர்களை
உன்னதமான செவிலியரை
நேயமிக்க பணியாளர்களை

அறியக்
கை
கொடுத்த பெருமையோடும் எலும்பிணைப்புக்குப்
பூட்டிக் கொண்ட
தட்டும் ஒன்பது திருகாணிகளுமாக!

7 Comments on “ஒரு சிறிய தட்டும் ஒன்பது திருகாணிகளும்/எஸ் வி வேணுகோபாலன்”

  1. உபாதையை கூட பொருட்படுத்தாமல் அது தந்த அனுபவத்தை உயர்வாக நினைத்து உதவியவர்களை போற்றும் பெரிய மனது

  2. ‘கேட்டிலும் உண்டோர் உறுதி’ என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாக, வலியைக் கவியாக மாற்றிய நேர்மறைச் சிந்தனையை நீடு வாழ்த்துகிறேன். விரைவாகக் குணமாக வேண்டுகிறேன்.

  3. கை கொடுக்கும் கை தெரியும்!
    கைக்கே கை கொடுத்த வள்ளலுக்கு
    என்னதான் செய்துவிட முடியும்?
    கைதட்டி மீண்டும் பாராட்ட , சீராட்ட
    இதோ தட்டில் ஏந்திய திருக் கை ஆணிகள்
    தந்து விட்டீர்! பொருத்தம்தானே இனி தேவை!

    In your left hand plate fixed with screws, I think.
    Wishing you a very speedy recovery sir🙏🙏🌺

  4. அடிபட்ட வலியிலும் , அசராமல் கவிதை பாடுகிறீர்கள் நன்று. எவ்விதமான துன்பங்கள் வந்தாலும் துவண்டு போகாத துணிவுள்ளவர்களுக்கே இது சாத்தியம். வாழ்த்துக்கள்.!!!
    அடடா!!! தகட்டை இணைக்க ஒன்பது ஆணிகளா?…
    அறுவைசிகிச்சை சற்று பெரியதுதான்பொலும்.

  5. மணிக்கட்டில்
    ஓடிக்கொண்டே சிரிக்கும்
    மணிக்கடிகைக்கே
    தேடி வந்த ஓய்வு!

    வேதனையாயினும்
    வாழ்த்தும் தமிழுலகத்தால்
    வேகம் மீண்டு வருவீர்….
    மீண்டும் பருக
    நல் தமிழ் தருவீர்!

Comments are closed.