
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
‘வானத்து அமரன்
வந்தான் காண்!
வந்தது போல்
போனான் காண்’ என்று
புலம்பாதீர்;
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்.
‘சித்தெ’ பசியாற
செல்லரிக்கும் நெஞ்சாற
மெத்தப் பழங்கதைக்கு
மெத்தப் பழங்கதையை
புத்தி தடுமாறிப்
புகன்றாலும்
அத்தனையும், ஐயோ
அவை யாவும் லட்சியங்கள்!
வானத்துக் கற்பனைகள்!
வையம் வளர்க்க வந்த
மோகன மந்திரங்கள்!
மோட்ச வழி காட்டிகள் ஓய்!
அத்தனையும் உங்கள்
அறிவை வளர்க்க வந்த
சொத்துக்கள் ஓய்!…
சொல்லுக்குச் சோர்வேது
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றது போல்.
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டிவைக்க முடியாது!
காசை வையும் கீழே. பின்
கனவு தமை வாங்கும்;
இந்தா!
காலத்தால் சாகாது,
காலத்தின்
ஏலத்தால் மலியாது!
ஏங்காணும்
ஓடுகிறீர்
ஓடாதீர்!
உமைப்போல நானும்
ஒருவன் காண்!
ஓடாதீர்!
–
