மனுஷ்ய புத்திரன் கவிதை

எனக்கு யாருமில்லாதபோதும்
ஒரு தேநீர் அருகில் இருந்திருக்கிறது

என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
நிச்சயமற்ற பயணங்களில்
சற்றே விடுதலையை உணர்வேன்

ஒரு கூடலுக்குப்பின்
அல்லது பிரிவுக்குப்பின்
என் மனதில் நிரம்பும் தனிமையை
ஒருதேநீரால் நிரப்புவேன்

மோசமான தேநீர்கள்
மோசமான காதல்களை
நினைவூட்டியிருக்கின்றன
சிறந்த காதல்கள்
சிறந்த தேநீரை நினைவூட்டியிருக்கின்றன

‘ காஃபி டீ குடிக்கும் பழக்கம் இல்லை’ என
என் தேநீரை மறுதலிப்பவர்கள்
இந்த வாழ்வின் அற்புதம் ஒன்றை
எப்படி மறுதலிக்கிறார்கள் என வியந்திருக்கிறேன்

ஒரு தேநீரின் சூட்டினால்தான்
என் சூரியன்கள் புலர்கின்றன
ஒரு தேநீரின் இதத்தினால்தான்
என் நிலவுகள் உதிக்கின்றன

ஒரு முத்ததின் வெம்மையை
ஒரு தேநீரைப் பருகுவதுபோலத்தான்
நான் பருகுவேன்

ஒரு அவமானத்தை சகிப்பதற்கு
ஒரு இழப்பை தாங்குவதற்கு
ஒரு துரோகத்தை எதிர்கொள்வதற்கு
ஒரு அற்பத்தனத்தை கடப்பதற்கு
ஒரு தேநீரை விட்டால்
எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?

கடவுள்களால் நமக்கு ஒரு ஆறுதலும் இல்லை
தேநீர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை

என்னை ஒவ்வொருவரும்
ஒரு சக்கர நாற்காலியில்
உட்காரவைத்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் போனீர்கள்
ஒவ்வொரு முறையும் பயந்தேன்
மனம் உடைந்து அழுதேன்
பிறகு
ஒரு தேநீரை அருந்தியபடி
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பேன்

இன்று தேநீர் தினம் என்கிறார்கள்
தேநீர் இல்லாத தினம் என
ஒன்றிருந்தால்
அன்று நான் சாரமிழந்துவிடுவேன்

21.5.2022
இரவு 8.03

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ebkc46KmTVceJAk2TDHVHZzFFgZGnzdDex5V7ohNsShnUaRvxYbx1S2NzmTRtR8Dl&id=100000477613498&mibextid=Nif5oz