ஆசாரக் கோவை /வளவ. துரையன்

பாடல் 36 : தவிர்க்க வேண்டிய சில

சுடரிடைப் போகார்: சுவர்மேல் உமியார்;
இடரெனினும் மாசுணி தங்கீழ்மேற் கொள்ளார்;
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்;
பலரிடை ஆடை உதிராரே; என்றும்
கடனறி காட்சி யவர்.

பொருள் :

பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே உடுத்தார்; எவ்வளவு நெருக்கடி வந்தாலும் தாம் உடுத்தி இருக்கும் ஆடைக்காற்று பிறர் மேல் படுமாறு உராய்ந்து செல்ல மாட்டார்; பலர் முன்னிலையில் ஆடையை உதற மாட்டார். (அவிழ்த்து உடுத்த மாட்டார்.)

பாடல் 37 : நினைக்கவும் கூடாதன சில

பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்; திறனிலனென்று
எள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.

பொருள் :

அறமறிந்தவர்கள் பிறர் மனைவி, மது, திருட்டு, சூது, கொலை இந்த ஐந்தையும் (அடைவோம் என்று ஆசைப்பட்டால், ஒழுக்கங்கெட்டவன் என்று) சமூகத்தால் இகழப்படுவதுமன்றி, நரகத்திற்குச் செல்லும் பாதையில் சேர்த்துவிடும் என்று (இவற்றை) மனத்தாலும் நினைக்க மாட்டார்கள்.

பாடல் 38 : சிந்திக்கத்தகாதன

பொய்குறளை வௌவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார். சிந்திப்பின்
ஐயம் புகுவித் தருகிரயத் துய்த்திடும்;
தெய்வமுஞ் செற்று விடும்.

பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார். சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும்.

பொருள் :
பொய் சொல்லுதல், பிறரைக் குறை சொல்லுதல், பிறர் பொருளை விரும்புதல், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய நான்கையும் தெளிவான அறிவுடையவர் சிந்திக்க மாட்டார். அவ்வாறு நினைத்தால் அவை ஏழ்மையை கொடுத்து நரகத்திலும் புகுத்துவிடும். அவரை தெய்வமும் கைவிட்டுவிடும்.

பாடல் 39 : உண்ணும் முறையில் விடுபட்டவை

தமக்கென் றுலையேற்றார்; தம்பொருட்டூன் கொள்ளார்;
அடுக்களை எச்சிற் படாஅர்; மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.

தமக்கு என்று உலை ஏற்றார்;
தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப்பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்.

பொருள் :
தமக்காக மட்டும் சமையல் செய்யமாட்டார்; தெய்வப்பலி அல்லாமல் தனக்காக ஒரு உயிரை கொன்று உண்ண மாட்டார். அடுக்களையை எச்சில் படுத்தமாட்டார்; வைச்வதேவம் (கடவுளுக்கு நிவேதனம், அதிதி, காகம் முதலானவர்களுக்கு படைத்துப்) பின்னரே உணவு உண்ண வேண்டும்.

பாடல் 40 : உண்ணும் பொழுது

உயர்ந்ததின் மேலிரார், உள்ளழிவு செய்யார்,
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைகள் உண்ணு மிடத்து.

பொருள் :
சிறுவர்கள் உண்ணுமிடத்தில் பெரியவர்கள் உயர்ந்த இடத்தின் மேல் இருத்தல் கூடாது. சிறுவர்கள் செய்யக்கூடாத குற்றங்கள் செய்திருந்தாலும் உண்ணும் பொழுது அவர்கள் மனம் நோகும்படி எதுவும் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது.

2 Comments on “ஆசாரக் கோவை /வளவ. துரையன்”

Comments are closed.