ஆத்மாநாமின் ஏக்கம்/அழகியசிங்கர்

06.07.2021

துளி – 208

ஆத்மாநாமின் நினைவுநாள் இன்று. 2021ல் நான் பதிவு செய்ததை இங்கு மீள் பிரசுரம் செய்கிறேன்.

ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

அக் கவிதையின் தலைப்பு ‘வெளியேற்றம்’.
கவிதையை இங்குத் தருகிறேன்.

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே”
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
“ என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்லுகையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

அந்த இறுக்கமான இரங்கல் கூட்டத்தில் யாரும் ஆத்மாநாமின் கவிதையைப் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் துக்கம் பொங்க பிரமிள் வாசித்த கவிதை எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அவர் கண்கள் கலங்கி விட்டன.

அவர் இந்தக் கவிதையை வாசித்துவிட்டு அவர் பேச்சை முடித்துக் கொண்டார்.

     அன்று கூட்ட முடிவில் பிரமிளை நான் டீ கடைக்கு அழைத்துக் கொண்டு போனேன்

அந்தக் கூட்டத்தை வழி நடத்தியவர் ஞானக்கூத்தன். அதன்பின் பிரமிளும் ஞானக்கூத்தனும் சந்தித்துக்கொள்ளவில்லை.