மஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம்!!/மதுரை பா இரவி

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.

அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.

ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, மஹா பெரியவா காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.

தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவாளிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.

ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார். “நாராயண அய்யரே! என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ…. என்ற பெரியவா,” “போங்கோ… போங்கோ…. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ…. நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்….” என்றார்.

விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.

தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.
ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.

பெரியவா அதனிடம் அன்புடன், “கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “ஐயோ குரங்கு … பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார்.

மஹா பெரியவா அவரிடம், “பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி… அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த மஹா பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார். பெரியவா சரணம்.

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன”

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எதிரே ஒரு பெரிய மரம், தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின் இருபது – முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்து கொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:
“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.”

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.”

“ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.”

“ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.”

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”

கவனமாக கேட்டு கொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.”

“காலையில், இரண்டு நிமிஷம் “ராம, ராம” என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் “சிவ, சிவ”ன்னு சொலுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்து பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லை காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி lecture!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை – நமக்கு நல்ல வழிகாட்டிகள்; “ஆச்சார்யர்கள்”.

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

🙏ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.🙏

🙏 🙏

One Comment on “மஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம்!!/மதுரை பா இரவி”

Comments are closed.