அம்மா இல்லாத வீடு/சீ. பாஸ்கர் 

தினமும் சாமி படங்களின்முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின் முன் சாமியாக
அம்மா வேண்டுமென்று 
அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் 
சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா 
இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே 
தினமும் சமாளித்து வருகிறார் அப்பா 
அக்காவிடம் அவ்வப்போது 
சின்னச் சின்ன சண்டைகள் போடும் சின்னவள் 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள் 
அம்மா வந்ததும் 
சொல்லி விடுவேன் என்று 
பெரியவள் 
பெரியவளான பின்புதான் 
இன்னொரு அம்மா உருவாகிறாள்
இல்லத்தில் 
சாமியை பார்க்கச்சென்ற அம்மா  
இனியும் திரும்பி வரமாட்டாள்
என்றுணர்ந்த சின்னவள்
தினமும் வணங்கத் தொடங்குகிறாள் 
அம்மா சாமியை 
விளக்கேற்றியபின்
விளக்கின் வெளிச்சத்தில்
அம்மாவின் முகத்தைத் தேடுகிறது
அவளின் விழிகள்

3 Comments on “அம்மா இல்லாத வீடு/சீ. பாஸ்கர் ”

Comments are closed.