– டி வி ராதாகிருஷ்ணன்
ஒட்டக்கூத்தனுக்கும், புகழேந்திக்கும் என்றுமே ஒத்துப்போகும் மனப்பான்மை
இல்லை.ஒரு முறை புகழேந்தியை பழித்து சோழ மன்னனிடம் ஒட்டக்கூத்தர் சொல்ல
அதற்கு புகழேந்தி அளித்த பதில்..ஆகிய இரண்டையும் காணலாம்.
இப்படிப்பட்ட தருணத்திலும், புலவர்களிடம் தமிழ் எப்படி விளையாடுகிறது
பாருங்கள்..ரசியுங்கள்
ஒட்டக்கூத்தன்
மானிற்குமோ விந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்
கானிற்குமோ விவ்வெரியுந் தணன்முன் கனைகடலின்
மீனிற்குமோ விந்தவெங்கண் சுறாமுனம் வீசுபனி
தானிற்குமோ விக்கதிரவன் றோற்றத்திற் றார்மன்னனே.!
சோழ மன்னனே! வேங்கை முன்னர் மான் நிற்குமோ? எரியும் தீ முன்னர் காய்ந்து
போயிருக்கும் காடு நிற்குமோ? கொடிய சுறா-மீனின் முன்னர் கடல் வாழ் மீன்
நிற்குமோ? கதிரவன் முன் வீசும் பனி நிற்குமோ? – அப்படித்தான் என் முன்
புகழேந்தி.
புகழேந்தி பதில் உரைக்கின்றார்…
மானவனா னந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானவனா னவ்வெரியுந் தணன்முன் கணைகடலின்
மீனவனா னந்தவெங்கண் சறாமுனம் வீசுபனி
தானவனா னக்கதிரவன் றோற்ற நற்றார் மன்னனே.
மன்னா! அந்த வேங்கைமுன் மானவன் (மான்) நான். அந்த எரி முன் கானவன்
(வேடன்) நான். அந்தச் சுறா முன் மீனவன் (மீனக்கொடி பறக்கும்
நாட்டிலிருந்து வந்தவன்) நான். அந்தப் பனி முன் தானவன் (தானைத் தலைவன்)
நான். தோன்றி எதிர்த்து நிற்பேன்.
ஒட்டக்கூத்தருக்கு..அவர் வரிகளை வைத்தே பதிலுரைத்த புகழேந்தியிடம்
விளையாடும் தமிழை ரசித்தீர்களா?
