அழகியசிங்கர்/இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம். ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார். நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன். ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நண்பர்கள் சந்தித்துக் கொள்வோம். இந்த முகநூல் அப்போது இல்லை. இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம்.

எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன். தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும். இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.

இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது. அவ்வளவுதூரம் இறுக்கி விட்டது பொழுது எல்லோருக்கும்.

ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். ‘இன்று எனக்குப் பிறந்தநாள்’ என்று. நாங்கள் அவரை வாழ்த்தினோம்.

‘இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக நடந்தது. ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்கிறேனே அதுவே பெரிய விஷயம், என்று சொன்னேன், கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினார்கள்,’ என்றார் ஞானக்கூத்தன்.

அன்று அவர் சொன்னதை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.
இன்று அவர் பிறந்தநாள். அவர் நினைவாக ‘உபதேசம்’ என்ற அவர் கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

One Comment on “அழகியசிங்கர்/இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..”

Comments are closed.