ஶ்ரீ நேசன்/கல்லல்

வனம் இணைய இதழ் வெளியிட்ட. கவிஞர்
ஶ்ரீ நேசன் கவிதை.
வாசிப்பது சிறகா .

இந்த மலைக்கு உடலெல்லாம் கண்கள் உண்டு
இமைக்காத கண்கள்
மூடாத கண்கள்
விழிக்காத தியானக் கண்கள்
மலையைப் பார்க்கும் கண்களெல்லாமும் மலையுடையதுதான்
அது தன் கண்களைத்
தன் கண்களால் பார்த்துக்கொண்டேயிருக்கின்றது
உண்மையில் பார்ப்பதை அதனிடம்தான் கற்றுக்கொண்டேன்
மலைக்கு ஜீவராசிகளைப் போன்று வாயொன்றும் இல்லைதான்
அதுதன் ரகசியங்களைத் தவிர்த்துவிட்டு
நம் அனைவரது மெளனத்தையும்
மூச்சு விடாமல் பேசிக்கொண்டேயிருக்கின்றது
கேட்போர் குறித்த கவலையேதும் இல்லாமல்
பேசுவதையும் இப்போது
அதனிடம்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
மலைக்கு ஏராளமாய் காதுகளும் உண்டு
மானுட அபத்தங்களிலிருந்து சற்றே விலகியிருந்து
இயற்கை வெளிப்படுத்தும்
ஒவ்வொரு வார்த்தையையும்
ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது
தன் சிறுசிறு முணுமுணுப்பையும் தவறவிடாது
கேட்பதையும் அதனிடமே கற்றுக்கொள்ளவேண்டி
அனுதினமும் சென்று அனுதினமும் கொண்டு வருகிறேன்.