க.மோகனரங்கன்/பேசாத பேச்செல்லாம்

முன் தினமோ
முந்தைய வருடமோ
முன்னொரு யுகமோ
உறுதியாய் தெரியவில்லை,
உனது எண்ணிற்கு அழைத்து
உன்னிடம் பேசினேன்.
உன்னோடு பேசியது போலவே இல்லை.
நினைவினின்றும் ஒற்றியெடுக்கையில்
ஒரெண் பிழையாகியிருக்கக் வேண்டும்
அல்லால்
உனது சாயலில்
உலகில் இன்னும் மீதமிருக்கும்
அறுவரில் ஒருவர்
உன் குரலில் பேசியிருக்கவும் கூடும்
இரு நிமிட நேரம்கூட இருக்காது
இடையிலேயே தொடர்பறுந்து போயிற்று.
வேளை வரும்போது
மீளவும் அழைப்பாயென எண்ணி
வாளாவிருந்தேன்.
வேண்டும்போதெல்லாம்
உனது குரலை
உயிர்ப்பித்துத் தருமந்த
மந்திரச் சிமிழ்
மறுபடியும் ஒலிக்கவேயில்லை.
அடர்ந்து பெருகிய அமைதியில்
கடல்கள் இடைபட்டு
கண்டங்கள் விலகிப் போக
குறுகிய அலைநீளம் கொண்ட
நம் குரல்களை
பரஸ்பரம் செவியுறவும் வழியற்று
மெளனம் பூண்டோம்.
பேச்சொடுங்கிய இப்பேரமைதியில்
மூச்சாய் இழைகிறது
மோனம்.