நாகேந்திர பாரதி/எங்களூர் மாட்டுப் பொங்கல்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் -90

ஏறு தழுவல் , சல்லிக் கட்டு
மஞ்சு விரட்டு என்று

திமிலோ , கொம்போ
கழுத்தோ பிடித்துத்

தழுவியும் கட்டியும்
விரட்டியும் விளையாட்டு

எத்தனை பெயர்களில்
ஏறுகளின் விளையாட்டு

எங்களூர் வீரர்களின்
வீர விளையாட்டு

விரட்டும் விளையாட்டு
மஞ்சு விரட்டு

வயற்காட்டில் ஓடுகின்ற
காளைகளைத் துரத்தி

கழுத்திலே கட்டியுள்ள
காசவிழ்த்து அடையும்

வாலிபரின் விளையாட்டில்
வயற்காடே நடுங்கும்

வரப்பில் விழுந்தும்
தாவியும் ஓடுகின்ற

காளைகட்கும் காளையர்க்கும்
காயங்கள் அதிகம் தான்

பார்த்த ஞாபகம் தான்
பங்கு பெற்றதில்லை நான்

————————–