நேற்று மாலை 18.01.24 வாசித்த கவிதை.
பொதிகைத் தென்றல் சுமந்த
காதல்
வாசக் கூந்தல் பட்டிமன்றம்
நடத்தியது.
வைகைக் கரை வீசு காற்று
தந்த காதல்
சங்கம் மூன்று வைத்து
பலகை
போட்டது.
காவேரிக் கரை சுழன்ற
காற்றின்
காதல் கானல்வரி எழுதி
மாதவியை
புத்தனடி சேர்த்தது.
கங்கை நதி கலந்த காற்று
ஏந்திய
காதல் பீஷ்மரைக் காட்டி
குருசேத்திரம்
பார்த்தது.
ஐந்திணைத் தென்றல்
காதல் மணம்
பேசிடத் தூது போனது.
பிரிந்தவர்
மனம் காட்டும் கண்ணாடி
ஆனது.
இன்று
புகை, நோய்த் தொற்று
வாங்கி
காதல் கணை தொடுக்க வரும்
காற்று
கொத்து கொத்தாய் கேட்டு
வரும் பலி.