
அழகியசிங்கரின் இன்றைய என்பா
திருத்தம் செய்யப்பட்டது
1.
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்
பூட்டிக்கொண்டு வந்தாலும் வீட்டின் நினைவுதான்.
நினைவுகளை நான் எப்படி பூட்ட?
கனவுகளில் வாழும் நான்.
2.
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்.
பெரிய பதாகை என்னிடம் சொல்கிறது.
தினமும் நான் மறந்து போகிறேன்.
இன்றாவது நினைவாகப் பூட்டவேண்டும்.
3.
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்.
ஆடு மாடுகள் உள்ளே புகுந்து,
செடி பயிர்களை நாசம் செய்கின்றன.
துரத்தி விடவும் அச்சம்.
4.
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்.
வயது சென்ற தாயார் உள்ளே;
ஏதோ நினைப்பில் வெளியேறி விட்டால்;
தேடிக் கண்டடைவது கடினம்.
5.
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்.
பொத்தி வைத்த நினைவுகள் துடிக்கின்றன.
கேட்டின் நாதாங்கியில் கை வைத்தபடி;
அம்மா இன்னும் அங்கேயே.
11-2-2024
