தஞ்சாவூர் ஹரணி/கைப்பேசியிலேயே கழிந்துவிட்டது

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 10
000
கைப்பேசியிலேயே கழிந்துவிட்டது
நமக்கான பேரன்பு..
நீதான் முன்மொழிந்தாய்
காத்திருக்கவேண்டும்
காத்திருக்கும் காலம்வரை
கைப்பேசியில் பகிர்ந்துகொள்ள
அன்பு நிறைய இருக்கிறதென்று..

பேரன்பு என்று அதற்கு நான்
பெயர் சூட்டிக் கொண்டாடியதை
எல்லாம் வெறும் கூத்தென்று
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போய்விட்டாய்..

பேரன்பும் பெருங்கூத்துதான்
அது ஒருமித்த உள்ளங்களின்
திருவரங்கத்தில் நிகழ்த்தும்
உணர்வுகளின் பொழிவுதான்..

எவரெவரோ இறைத்துவிட்ட
உணவுத்துகள்களைத் தேடிவரும்
எறும்புக்கூட்டம்போல யார்யாரோ
குவித்த சொற்களை என்னிடத்து
இறைத்துவிட்டுப்போய்விட்டாய்
நான் எறும்பு அல்ல பொறுக்குவதற்கு
உணவிற்கும் உணர்விற்கும்
இருக்கவே செய்கிறது வேறுபாடு
அதுதான் உயிர்க்கவும் செய்கிறதென்னை.

அதனாலென்ன போய்வா..
போய்வா.. போய்வா..