06.04.2024
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : ஏன் தூங்கித் தூங்கி வழிகிறீர்கள்?
அழகியசிங்கர் : பகலிலும் சரி, இரவுகளிலும் சரி நான் சரியாகத் தூங்குவது இல்லை.
மோகினி : சில சமயம் நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போய் விடுகிறது.
அழகியசிங்கர் : உண்மைதான். விருட்சம் 125வது இதழ் இன்னும் முடிக்கவில்லை. அதற்கான ஆர்வமும் இல்லாமல் இருப்பது புரிகிறது. அதேபோல் இன்னும் இரண்டு புத்தகங்களை முடிக்க வேண்டும். ஒன்று லாவண்யாவின் சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது என் தொகுப்பு. துளிகள் 4. இதெல்லாம் வைத்துக்கொண்டு ஒன்றும் முடியாமல் அவஸ்தைப் படுகிறேன்.
மோகினி : தூக்கம்தான் எல்லாவற்றுக்கும் காரணமா?
அழகியசிங்கர் :. ஆமாம். இதைக் கூட தூங்கிக் கொண்டுதான் அடிக்கிறேன். நிறையத் தூக்கம் வந்து விட்டால் பேசாமல் எழுந்து போய்விடுவேன்.
ஜெகன் : ஏன் முழுதாக ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது.
அழகியசிங்கர் : உண்மைதான். நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.
மோகினி : என்ன வழி?
அழகியசிங்கர் : எப்படியும் வாசித்தே தீர்வது.
மோகினி : வாழ்த்துகள்.
அழகியசிங்கர் : வாசிப்பது என்பது மட்டுமல்ல. குறிப்பு எடுத்து வாசிப்பது. முதலில் ஒரு புத்தகத்தைத் தயாரித்து வைத்திருக்கிறேன். வாசித்து பின் குறிப்பெடுத்து அதன் பின் எழுதப்போகிறேன்.
மோகினி : முயற்சி செய்யுங்கள்.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். (தூக்கக் கண்களோடு) முடித்துக் கொள்ளலாம்.
(இரவு 11.25 ஆனால் காலையில் பதிவு செய்துள்ளது)