விருட்சம் இதழில்/அழகிய சிங்கர்

ஒரு சமயத்தில் குமுதம் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக சுஜாதா இருந்தபோது, சிறு பத்திரிகைகளில் உலாவி வந்த புதுக்கவிதைகளை ஏராளமாக உள்ளே நுழைத்து விட்டார். இதை அப்போது உள்ள யாரும் செய்திருக்க மாட்டார்கள். அன்றிலிருந்து புதுக்கவிதைகளை பெரும் பத்திரிகைகள் எடுத்துக் கொண்டு விட்டன. அவர் கதைகள் ஒவ்வொன்றும் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கலாம்.

ஆனால் யாரும் சுஜாதாவை பாராட்டி சொல்ல மாட்டார்கள். அதுமாதிரி எழுத இப்போது யாரும் இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக ஜனரஞ்சக எழுத்தாளர்கள் யார் கண்ணிலும் படாமல் ஜனரஞ்சகமாகவே இருப்பார்கள். ஆனால் சுஜாதா விதிவிலக்கு. தீவிர எழுத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் பாலமாக இருந்து செயல்பட்டிருக்கிறார். நிறைய எழுதி விட்டார். இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். எழுதி தயாரித்து வந்து கட்டுரையாக வாசித்து விடுவார். அவர் மனதுக்குப் பிடித்த படைப்புகளைப் பாராட்டாமல் இருக்க மாட்டார். அவர் தொடர்கதைகளில் கணேஷ் வசந்த் பேசுகிற உரையாடலில் எல்லாம் இருக்கும். திடீரென்று விருட்சம் பத்திரிகையைப் பற்றிய பேச்சும் இருக்கும். அவர் புத்தகம் எப்போதும் விற்றுக் கொண்டே இருக்கும். ஒரு சமயம் சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலரை முழுவதும் படித்துவிட்டு விடு விடுவென்று விமர்சனம் எழுதி விட்டார். என் சகோதரன் அடிக்கடி சுஜாதா புத்தகத்திலிருந்து ஒரு வரி சொல்வான். ‘அவள் உட்கார்ந்த இடத்தைத் தட்டினான்,’ என்று. எந்தப் புத்ததத்தில் இதைப் படித்தான் என்பது தெரியவில்லை. ஆபாசத்தைக் கூட நகைச்சுவை உணர்வோட சொல்லக் கூடியவர்.

கணையாழியில் தீவிரமாக கடைசிப் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் எழுதி தள்ளி விடுவார். எனக்கு இன்னும்கூட குருபிராசாத்தின் கடைசி தினங்கள் என்ற குறுநாவல் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதைகளையும் அவர் அலட்சியமாக எழுதி உள்ளார். சுஜாதாவின் கதையைத்தான் எந்திரன் என்ற படமாக எடுத்து உள்ளார்கள். திரைக் கதை எழுதுவது எப்படி என்ற சுஜாதாவின் புத்தகம் பிரபலமான புத்தகம். நாடகம் எழுதுவதிலும் அவர் முயற்சி செய்யாமல் இல்லை.

இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதியிருக்கிறார். உடனே படித்து முடித்து விடலாம். நான் புத்தகத்தை மூடி வைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது உண்டா என்பது தெரியவில்லை.