ப.மதியழகன்/அறிந்தும் அறியாமலும்

விருட்சம் நடத்தும் 25வது இணையகால கவியரங்கம்
நாள்: 29.3.24 தேதி: வெள்ளி

நீ என்ன சொல்ல வருகிறாய்
எடையற்றவனாக காற்றில் மிதக்க
நான் எதை இழக்க வேண்டும்
சந்திக்கும் தருணங்களிலெல்லாம்
கதைகளிலிருந்து முளைக்கிறது
கிளைக் கதைகள்
படுக்கையிலிருந்து எழுந்ததும்
மறந்துவிடுகிறேன்
நடுநிசியில் கண்ட கனவை
தூக்கம் மரணத்தின்
ஒத்திகை என்றால்
அதையே ஏன் என்மனம்
நாடுகிறது
எப்போதாவது தான்
இரவு வானத்தைப் பார்க்க
நேர்கிறது
சுமையாக இருக்கிறதென்று
இறக்கி வைத்துவிடுகிறேன்
கடவுளின் நினைப்பை
என்னிடம் இருக்கிறது
யாரிடமும் இல்லாதது
அதை ஏன் உங்களிடம்
சொல்ல வேண்டும்
எனது அழைப்பை
ஏற்றுக் கொள்ளுங்கள்
புறக்கணிப்பவர்கள்
எதை இழந்தார்கள் என்பதை
குறுஞ்செய்தி பார்த்து
தெரிந்து கொள்ளட்டும்
விசுவாசமாய் இருப்பவர்கள்
தண்ணீரை அருந்தினாலும்
திராட்சை ரசமென்று
சாட்சி பகர்வார்கள்
சிதறிய சிறிய
துளிகளிலெல்லாம்
பிரபஞ்சம் பிரதிபலிக்கிறது
சகித்துக் கொள்ளுங்கள்
அல்லது
உங்களுக்குள் முணுமுணுத்துக்
கொள்ளுங்கள்
உங்களை வரவேற்று உபசரிப்பதற்கு
நீங்கள் இந்த உலகத்தின்
அதிதி அல்ல