சாவி/அஜ கீதம்

பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, “ஏ கழுதை, இங்கே வா” என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த-போதிலும் பாஸ்கரன் மட்டும் கோபிப்பதே கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் அவர்களெல்லாம் அவனை, “கழுதை, நாய்” என்று அழைப்பதே அவனுக்குப் பெருமையா யிருந்தது. அவனுடைய பெருமைக்குக் காரணம் உண்டு. நாயைப்போல் குரைப்பான் ; சிம்மத்தைப்போல் கர்ஜிப்பான். இன்னும் எந்தெந்த மிருகம் எப்படி எப்படிக் கத்துகிறதோ, எந்தெந்தப் பட்சி எவ்வெவ்விதம் சப்திக்கின்றனவோ அப்படி யெல்லாம் தத்ரூபமாகச் செய்து காட்டுவான்.
இந்த அதிசய வித்தையை அவன் தானாகவேதான் கற்றுக் கொண்டான். இந்தக் குணம் அவனுக்குப் பிறவியிலேயே அமைந்திருந்தது. அதனால் தான் அவனை எல்லோரும் “கழுதை, நாய்” என்றெல்லாம் பட்டம் சூட்டி அழைத்தார்கள்.
அதற்காகவே பாஸ்கரனுக்கு ஒரு சமயம் அவன் பள்ளிக் கூடத்தின் வருஷாந்திர விழாவின் போது ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தார்கள்.
சென்ற வருஷம் பாஸ்கரன் மேற்கொண்டு படிப்பதற்காகச் சென்னைக்கு வந்தான். தனியாக வாடகைக்கு ஒரு “ரூம்” எடுத்துக்கொண்டு படிக்க விரும்பினான். ஓர் அறைக்காகச் சென்னை நகரத் தெருக்களைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடைசியாகப் புரசைவாக்கத்தில் ஓர் இடம் கிடைத்தது. அது அந்த வீட்டு மேல்மாடியில் தெற்கு நோக்கிய அறை. இரண்டு ஜன்னல்கள். மாடியிலேயே குழாய். அந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது. அத்துடன் அந்த வீட்டில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான் குடியிருந்தாள். அவளிடம் அரைகுறையாகப் பேசும் ஒரு சின்னக் குழந்தை அவ்வளவேதான்.
பாஸ்கரன், ”பாட்டி, இந்த அறையை நான் எடுத்துக் கொள்கிறேன் ; வாடகையைச் சொல்லுங்கள்” என்றான்.
“ரொம்ப அதிகமில்லை. உன்னைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தோன்றுகிறது. எலெக்ட்ரிக் விளக்கு இருக்கிறது. இரவு பூராவும் வேண்டுமானாலும் படிக்கலாம். எனக்கும் இந்த வீட்டில் மனுஷாள் சகாயமில்லை. என் பிள்ளைக்கு மிலிடரியில் வேலை. இதோ இந்தக் குழந்தை அவனுடையதுதான் ; என் பேரன். இதன் தாயார் போன வருஷம் ”டைபாயிட்” ஜுரத்தில் இறந்து விட்டாள். நான் ஒண்டிக்காரியாக இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன். இதற்கு டாக்டர் ஆட்டுப்பால் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார். அதற்காக ஒரு வெள்ளாடு வாங்கி வளர்க்கிறேன். அதோ கீழே கட்டி வைத்திருக்கிறேன், பார்” என்றாள் பாட்டி.
இந்தச் சமயத்தில் கீழே கட்டப்பட்டிருந்த வெள்ளாடு, ”மே……..ஏ….ஏ” என்று கத்தித் தான் இருப்பதைத் தெரிவித்துக்கொண்டது.
”பாட்டி ! நான் உங்களை வாடகை என்ன என்று கேட்டேனே ஒழிய இதெல்லாம் கேட்கவில்லையே” என்றான் பாஸ்கரன்.
”அதுக்கில்லேடாப்பா ; வாடகை ஆறு ரூபாய்தான் ; கொடுத்துவிடு” என்றாள் பாட்டி.

#

பாஸ்கரன் மேற்படி வீட்டுக்குக் குடி வந்த ஒரு மாதத்திற் கெல்லாம் பரீக்ஷையும் நெருங்கிற்று. இராத்திரி பூராவும் மணிக்கணக்கில் கண் விழித்துப் படிக்க ஆரம்பித்தான். தினமும் ”டீ”க்காக மட்டும் நாலணாச் செலவழிந்தது. பாஸ்கரனைப் போல் இராத்திரி வேளையில் அந்த ஆடுகூடக் கண் விழித்துக் கொண்டு அடிக்கடி கத்த ஆரம்பித்தது.
பாஸ்கரனால் அதைச் சகிக்க முடியவில்லை. அந்தத் தலை வேதனையுடன் அவனால் எப்படிப் படிக்க முடியும்? பொறுத்துப் பார்த்தான்.
“மே…ஏ…ஏ..ஏ” என்று விடாமல் கத்தியது ஆடு. அவனால் மேற்படி அஜகீதத்தைச் சகிக்கமுடிய வில்லை. எந்த மிருகத்தைப் போலும் கத்துவதில் அவன் தீரனல்லவா? அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எரிச்சலுடன் அவனும் “மே….. ஏ….ஏ…ஏ” என்று கத்தி, ஆட்டுக்கு அழகு காட்டினான். பதிலுக்கு ஆடும் கத்தியது. மறுபடியும் பாஸ்கரன் தொடர்ந்து கத்தினான். இப்படியாக ஆடும் பாஸ்கரனும் மாறி மாறி இரவு பூராவும் அஜகீதம் பாடித் தீர்த்தார்கள்.
பாட்டி ஒன்றும் பேசாமல் மௌனமாகத் தானாகவே சிரித்துக் கொண்டாள்.
குழந்தைக்கு அஜகீதத்தில் பிரியம் ஏற்பட்டது. அது அழுகிறபோது ஆடு கத்தினால் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தித் தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கும்.
ஆடு சில சமயங்களில் கத்தாமற் போனால் அதற்காக அந்தக் குழந்தை அழுவதும் உண்டு. திடீரென்று ஒருநாள் பாட்டி வளர்த்து வந்த அந்த ஆடு இறந்து விட்டது. தன்னுடைய படிப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த அந்த ஆடு செத்துப் போனதில் பாஸ்கரனுக்குப் பரம திருப்தி. ஆனால் இன்னொரு இடைஞ்சல் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
பாட்டி பாஸ்கரனிடம் வந்து, “அப்பா, உனக்குப் புண்ணியம் உண்டு. தாயில்லாக் குழந்தை அழுவதை நிறுத்தினால் உனக்கு எவ்வளவோ நல்லது. அதோ பார் ; ஆடு கத்தவில்லை என்று குழந்தை பிரமாதமாய் அழுகிறது. அந்த ஆடு செத்துப்போன விஷயம் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் இன்னும் அதிகமாய் அழ ஆரம்பித்து-விடும். நீதான் அந்த ஆடு மாதிரியே தத்ரூபமாய்க் கத்துகிறாயே. தயவு செய்து குழந்தை அழும் சமயங்களில் மட்டும் கத்தினால் போதும். நீ வாடகை கூடக் கொடுக்க வேண்டாம். இனா மாகவே குடியிருந்து கொள்.”
பாஸ்கரன் யோசித்தான். வாடகை இனாமல்லவா? “மே… ஏ… ஏ..ஏ” ” என்று கத்தினான்.
உள்ளே அழுதுகொண்டிருந்த குழந்தையும் சிரித்தது. இப்போது ஒவ்வொரு நாளும் பாஸ்கரன் அஜகீதம் பாடி வருகிறான்!

சாவி/ மௌனப் பிள்ளையார் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சாவி/அஜ கீதம்”

Comments are closed.