மதுவந்தி/குரோதி- தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

.

“புத்தாண்டுன்னு எப்படித் தெரியும்?”
பூ பழம் பொன் வைத்த தட்டின்
மீதிருந்த கண்ணாடியில் விழித்தபின்
கேட்டாள் பேத்தி.
முடிந்த வருடம் சோபக்கிருது,
புதுசாப் பிறந்த வருடம்
குரோதி.என்றேன்
பேர் மாறினால் மட்டும் போதுமா?
வேற ஒண்ணும் மாறினா மாதிரித்
தெரியலியே!! என்றாள்.

வீட்டு வாசல் வேப்பமரம் நேற்றுப்
பார்த்த மரம் போலேவே இன்றும்
தெரிந்தாலும், கொஞ்சம் இலைகள் உதிர்த்து
கொஞ்சம் பூக்கள் பூத்து கொஞ்சம்
புதிதாகத்தான் இன்று நிற்கிறது.

ஜன்னல் வழி காணும் வானம்
கணந்தோறும் மாறுகிறது
விழி பார்த்துத் தெரியாமல்
போனாலும், உணர்ந்தறியும்
மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே.

இன்று புத்தாண்டு கொண்டாடலாம்
வாவென்றேன் புத்தாடையில்
மகிழ்கிற பேத்தியிடம்.

                      . 14.04.2024