எஸ்ஸார்சி கவிதைகள்

19/4/24

அனுபவம்

பச்சைக் கொத்துமல்லி
ரசம் வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப் போனேன்
சிறு கத்தை
டாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்
பார்த்த மருமகள்
இது பார்ஸ்லே என்றாள்
வாயில் போட்டுப் பார்த்தேன்
சுவையில் ஏதோ ஓர் நெடி
திரும்பக் கொண்டு கொடு
கடையில் என்றாள் மனைவி
உரிய பில்லோடு
கடைக்குப் போனேன்
அமேசானில் அதே உபசரிப்பு
அதே மரியாதை
கொத்துமல்லிக் காசோடு
அதற்கு எத்தனை வரி
போட்டிருந்ததோ இரண்டையும் கூட்டி
திருப்பிக்கொடுத்தாள்
புன்னகைத்தாள் கடைக்காரி
நன்றி பல சொன்னாள்
திரும்பக்கொடுத்த டாலருக்கும் பில் தந்தாள்
நம்மூரில் தங்கமே வாங்கினாலும் இதுவெல்லாம்
இப்படிச் சாத்தியமேயில்லை.


சோதிடம்

சோதிடம் பொய்யென்றாலும்
அது பார்ப்பது மட்டும் ஓயவில்லை
யோசித்துப் பார்க்கிறேன்
ஆயிரம் ஆண்டுகளாய்
தொடர்கதையாய்த் தான் இது
தூக்கி அதனை ஓரமாய்
வைத்துவிட்டு
வேறு வேலை பார்க்கவும்
முடியவில்லையே
பலதுகளில் சிலதுகள்
அச்சு அசலாய் சரியாகவே இருப்பதாய்த்
தோன்றுகின்றன
ஜோதிடம் அதெல்லாம் சும்மா கதை பேசலாம்
யதார்த்தத்தில் முடியவில்லை
என்பதுவே நிதர்சனம்.

தேர்தல்

நாடாளுமன்றத்தேர்தல்
தமிழ் நிலத்தில்
முடிந்து போனது
தேர்தல் முடிவுகள் தெரியவரும்
நாட்கள் சிலவாகும்
காத்திருப்போம்
ஆனால் ஒரு கேள்வி
சாதி பார்த்துத்தான்
தேர்தலில் நிறுத்துவார்கள்
ஓட்டுப் போடுவார்கள்
ஐம்பத்து இரண்டில்
நெல்லையில் சோமயாஜுலு அய்யரும்
முதுகுன்றத்தில்
வேத மாணிக்கம் அட்டவணை இனத்தார் பொதுத்தொகுதியிலும்
எம்எல்ஏ ஆனார்கள்
விடுதலைப் போராட்ட வீரர்கள்
இன்றைக்குச் சாத்தியமே இப்படி எதுவும்
விடுதலை பெற்ற இந்தியத்
திருநாட்டில்
சாதி கெட்டிப்பட்டுக்
கிடக்கிறது
ராகுல் காந்தி
கேரள வயநாட்டில்
நிற்பது தனிரகம்.